ஆசியாவின் நோபல் பரிசு என்றழைக்கப்படும் மகசேசே விருதை இந்தாண்டு இரண்டு இந்தியர்களும் வாங்குகின்றனர். அதில் ஒருவரின் கதையை மையமாக வைத்து தான் ‘3 இடியட்ஸ்’ நாவல் மற்றும் திரைப்படம் உருவானது.
பாரத் வாத்வானி மற்றும் சோனம் வாங்சக் ஆகிய இந்தியர்களே மகசேசே விருது வாங்கும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் சோனம் வாங்சக் தான் ‘3 இடியட்ஸ்’ உருவாவதற்கு தூண்டுகோலாக இருந்தவர்.
1957 ஆம் ஆண்டு முதல் மகசேசே விருது, தன்னிகரற்று செயல்படும் ஆசியர்ளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டின் மூன்றாவது அதிபரின் நினைவாக அவரின் பெயரிலேயே கொடுக்கப்படும் விருது தான் ‘ரமோன் மகசேசே விருது’. இந்த விருது ஆசியாவின் நோபல் பரிசு என்றழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு மகசேசே விருது வழங்கும் விழா, பிலிப்பைன்ஸில் இருக்கும் கலாசார மையத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி நடக்கும். அங்கு விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு, சான்றிதழ், விருது மற்றும் பணப் பரிசு கொடுக்கப்படும்.
இந்தியாவிலிருந்து விருது வாங்கும் வாத்வானி குறித்து மகசேசே விருது வழங்கும் அமைப்பு, ‘இந்தியாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக தன்னலமின்றி செயல்பட்டு வருபவர். அனைவரும் மனித மாண்புடன் வாழ வேண்டும் என்று போராடி வருபவர்’ என்று குறிப்பிட்டுள்ளது.
அதேபோல வாங்சக்குக்கு, ‘வட இந்தியாவின் கிராமப்புறங்களில் வித்தியாசமான, புதுமையான, சமூகத்தை ஒருங்கிணைக்கும் வகையிலான கற்றலை அளித்து வருகிறார். இதன் மூலம் லடாக் பகுதி இளைஞர்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். சிறுபான்மை இன மக்களின் சமூக மாற்றத்துக்கு ஒரு நல் உதாரணத்தை அவர் முன் வைத்து வருகிறார்’ என்று மகசேசே அமைப்பு குறிப்பிட்டு தெரிவித்துள்ளது.