இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் புலிகளின் எண்ணிக்கை 750 அதிகரித்து மொத்தம் தற்போது 2,976 புலிகள் இருப்பதாக மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அளித்துள்ள பதில்-
நாட்டில் தற்போது மொத்தம் 2,976 புலிகள் உள்ளன. இதைக் கேட்டு நாம் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் கடந்த 4 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை 750 அதிகரித்துள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் புலிகளின் எண்ணிக்கை 2,226 – ஆக இருந்தது.
சிங்கம், புலி, யானைகள், காண்டா மிருகங்கள் ஆகியவை இந்தியாவின் சொத்துக்கள். வைரஸ் தாக்குதலால் இவற்றில் எதாவது உயிரிழந்தால் அதுகுறித்து உயர் மட்ட விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
நாட்டின் காடுகளின் பரப்பளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வடகிழக்கு மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களின் வனத்துறை அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்று, 5 ஆண்டு திட்டம் ஒன்று தீட்டப்பட்டுள்ளது.
கடந்த 2007 முதல் 2017 வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி நாட்டில் காடுகளின் அளவு 17,374 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு அதிகரித்துள்ளது.
காடுகளை அதிகரித்த மாநிலங்களில் மேற்கு வங்கம் முதலிடத்திலும், ஒருங்கிணைந்த ஆந்திரா இரண்டாவது இடத்திலும், கேரளா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
நாட்டில் மொத்தம் 7.08 லட்சம் சதுர கிலோ மீட்டர் அளவுக்கு காடுகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.