This Article is From Sep 15, 2018

குட்கா ஊழலுக்கு நடுவே விஜய பாஸ்கருக்கு அதிமுகவில் முக்கிய பதவி அறிவிப்பு

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 19ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னையில் நடைப்பெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது

குட்கா ஊழலுக்கு நடுவே விஜய பாஸ்கருக்கு அதிமுகவில் முக்கிய பதவி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற பொருட்களை கள்ளச் சந்தையில் விற்பதற்காக காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பல கோடி ரூபாய் லஞ்சப் பணம் தரப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

எனவே, கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர் நீதிமன்றம், குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் குட்கா அதிபர் மாதவ ராவிடம் விசாரணை நடத்திய சி.பி.ஐ, அவரது கிடங்கிற்கு சீல் வைத்தது. குட்கா அதிபர் மாதவ ராவிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் ஏராளமான போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பெயர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அந்தப் பெயர்களின் அடிப்படையில் அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் சி.பி.ஐ சோதனை செய்தது.

அதனை தொடர்ந்து சி.பி.ஐ நடத்திய விசாரணையில், குட்கா நிறுவன பங்குதாரர்கள் மாதவ ராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன், ஶ்ரீநிவாச ராவ் ஆகியோரும் சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அதிமுக அமைப்புச் செயலாளராக அமைச்சர் விஜயபாஸ்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளரரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று இரண்டாவது நாளாக தலைமை கழகத்தில் உயர்மட்ட ஆலோசனை நடத்தினர்.

அதில், அதிமுகவின் சட்ட ஆலோசகராக பி.ஹெச்.பாண்டியன் நியமிக்கபட்டுள்ளார். கழக அமைப்புச் செயலாளராக முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம், அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 19ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னையில் நடைப்பெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.