This Article is From Oct 19, 2019

INX வழக்கில் குற்றப்பத்திரிகை… சிதம்பரம் குடும்பத்துக்கு எச்சரிக்கை… CBI வைத்த வாதங்கள் என்ன?

INX Media case - முன்னதாக P Chidambaram தரப்பு, ஐ.என்.எக்ஸ் வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி பிணை மனு தாக்கல் செய்திருந்தது.

INX வழக்கில் குற்றப்பத்திரிகை… சிதம்பரம் குடும்பத்துக்கு எச்சரிக்கை… CBI வைத்த வாதங்கள் என்ன?

INX Media case - குற்றப்பத்திரிகை குறித்தான விசாரணை வரும் 21 ஆம் தேதி எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் (INX Media case) சிபிஐ (CBI) அமைப்பு, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகைத் தாக்கல் செய்துள்ளது. அது குறித்தான விசாரணை வரும் 21 ஆம் தேதி எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.

குற்றப் பத்திரிகையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் (P Chidambaram), அவரது மகன் மற்றும் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், இந்தியராணி முகர்ஜி உள்ளிட்டவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

முன்னதாக ப.சிதம்பரம் தரப்பு, ஐ.என்.எக்ஸ் வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி பிணை மனு தாக்கல் செய்திருந்தது. இதற்கு எதிராக இன்று வாதாடியது சிபிஐ.

சிபிஐ அமைப்பு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். “வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ப.சிதம்பரம், நாட்டிலிருந்து தப்பிச் செல்ல வாய்ப்பிருக்கிறது. அதேபோல, இந்த வழக்கின் சாட்சி கொடுத்தவர் இடத்திலும் அவர் தாக்கம் எற்படுத்த வாய்ப்புள்ளது. 

இது தொடர்பாக வழக்கில் சாட்சியாக உள்ளவரும், ஒப்புக் கொண்டுள்ளார். அவர் குறித்த தகவல்களை நாங்கள் வெளியிட விரும்பவில்லை. சிபிஐ நீதிமன்றத்தில் அவர் குறித்தான தகவல்கள் மூடிய உரையில் கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

தொடர்ந்து வழக்கில் இருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து மேத்தா, “ஊழலுக்கு எதிராக நம் நாடு தீர்க்கமாக, எந்தவித சமரசமும் இன்றி செயல்பட வேண்டும். சிதம்பரம், இந்த வழக்கைப் பொறுத்தவரை பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளார்.

இவ்வழக்கில் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. சிங்கப்பூர், மொரீஷியஸ் நாடுகளின் அரசுகளிடமிருந்து விளக்கங்களுக்குகாக காத்திருக்கிறோம்” என்று வாதங்களை அடுக்கினார். அடுத்து வரும் நாட்களில் சிதம்பரம் தரப்புக்கும் அரசு தரப்புக்கும் நீதிமன்றத்தில் வாதப் போர் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த 2000 ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. அதனடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் கடந்த 2018-இல் வழக்குப்பதிவு செய்தது. சிபிஐ, ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி கைது செய்தது. பின்னர், அவரை காவலில் எடுத்து, சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்ட அவர், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


 

.