This Article is From Aug 22, 2019

'இது ஒன்னும் புதுசு இல்ல; சட்டப்படி பிரச்னையை எதிர்கொள்வோம்' - கார்த்தி சிதம்பரம் ஆவேசம்!!

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

'இது ஒன்னும் புதுசு இல்ல; சட்டப்படி பிரச்னையை எதிர்கொள்வோம்' - கார்த்தி சிதம்பரம் ஆவேசம்!!

முன் ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனு அவசர வழக்காக எடுத்துக் கொள்ளப்படவில்லை.

சிபிஐ அதிகாரிகளால் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதாகி இருக்கும் நிலையில் இது தங்களுக்கு ஒன்று புதிதல்ல என்றும் சட்டப்படி பிரச்னையை எதிர்கொள்வோம் எனவும் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன் ஜாமீன் கேட்டு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து, அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

இன்று விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், மதியம் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் தொடர்பாக சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

இந்த அரசு முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காக எந்தவொரு சம்பந்தமும் இல்லாமல் வழக்கை ஜோடித்துள்ளது. இந்த வழக்கில் உள்ள சம்பவங்கள் எல்லாம் 2008-ல் நடந்ததாக சொல்கிறார்கள். அதற்கு 9 ஆண்டுகள் கழித்து 2017-ல் வழக்குப்பதிவு செய்கின்றனர். 

அதுதொடர்பாக எங்களுக்கு சொந்தமான இடங்களில் 4 முறை ரெய்டு செய்தார்கள். இந்தியாவிலேயே இந்த அளவுக்கு யாரும் ரெய்டு செய்யப்பட்டது கிடையாது. 

20 தடவை எனக்கு சம்மன் அளித்துள்ளனர். அது ஒவ்வொன்றுக்கும் 10 மணி நேரம் ஆஜராகி கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளேன். சிபிஐயின் விருந்தாளியாக 11 நாட்கள் இருந்திருக்கிறேன். இதற்கு பின்னரும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லையே. 

முழுக்க முழுக்க யாரையோ திருப்திபடுத்துவதற்கு, அரசியல் காரணங்களுக்காக, தொலைக்காட்சியில் செய்தி வர வேண்டும் என்பதற்காக செய்கிறார்கள். உண்மையான விசாரணை போன்று தெரியவில்லை. 

எனக்கு நடந்தவற்றையெல்லாம் சட்டப்படி எதிர்கொண்டுதான் இன்று எம்.பி.யாகி உள்ளேன். அதேபோன்று இந்த விவகாரத்தையும் எதிர்கொள்வோம். இது ஒன்றும் எங்களுக்கு புதுசு இல்லை. சட்டப்படி பிரச்னையை எதிர்கொள்வோம். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

.