ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு, ‘ரஃபேல் ஒப்பந்தம் குறித்து நிபுணர்கள் தான் ஆய்வு செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்யக் கூடாது' என்று வாதிட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில் வாதாடிய அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், ‘ரஃபேல் ஒப்பந்தம் குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் தன் முடிவை மாற்றிக் கொள்ள வாய்ப்பில்லையா?
இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை வழக்கிற்காக கூட நானே ரஃபேல் தொடர்பான ரகசிய தகவல்களை பெறவில்லை. காரணம் தகவல் கசிந்துவிட்டால் நான் தான் அதற்கு பொறுப்பாகிவிடக் கூடும். ரஃபேல் தொடர்பான உள் விவரங்கள் நீதிமன்றத்திடம் தெரிந்துவிட்டால் அது மனுதாரர்களுக்கு சாதகமாக அமைந்துவிடும்' என்றும் தெரிவித்தார்.
ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான நிதி சார்ந்த தகவல்களை கொடுக்குமாறு சில வாரங்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்றம், மத்திய அரசிடம் கோரியது. இதையடுத்து நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ராணுவத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் ஆகியோர், ரஃபேல் ஆவணங்களை ஒப்படைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பேச்சுவார்த்தையின் முடிவில் உச்ச நீதிமன்றத்திடம் ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. அதன்படி இன்று ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்தது மத்திய அரசு.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிமன்ற அமர்விடம் ஆவணங்கள், மூடிய கவர் ஒன்றில் வைத்து கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் ஒப்புதல் இருக்கிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது.