தமிழகத்தில் சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
சேலத்தில் புதிதாக கட்டப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், தமிழகத்தில் கொரோனா மரணங்கள் குறைத்துக் காட்டப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பிய போது,
இறப்பில் என்ன வித்தியாசம்? அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் அளிக்கும் விவரங்களின் அடிப்படையில் வெளியிடப்படுகிறது. இறப்பை யாராலும் மறைக்க முடியாது. இறப்பு விவரங்களை எப்படிக் குறைத்துக் காட்ட முடியும்? எந்த இறப்பு வந்தாலும் பிரச்சினை இல்லை.
ஆனால், கொரோனா மரணங்கள் நிகழ்ந்தால் மக்களுக்குத் தெரிந்துவிடும். மரணங்களை மறைப்பதில் அரசுக்கு எந்தவித நன்மையும் இல்லை. இதில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படுகிறது. நாள்தோறும் புள்ளிவிவரங்களை வெளியிடுகிறோம். இதில் ஒளிவுமறைவு இல்லை.
புற்றுநோய், நீரிழிவு, இருதய நோய்கள், சிறுநீரகப் பிரச்சினை உட்பட ஏற்கெனவே பல நோய்வாய்ப்பட்டு இறப்பவர்களின் விகிதம்தான் அதிகம். கொரோனா தொற்று மட்டும் ஏற்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இறப்பு சதவீதம் குறைவாக இருக்கிறது என்றார்.
தொடர்ந்து அவரிடம் தமிழகத்தில் சமூகப் பரவல் உள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதிலளித்த அவர்,
சமூகப் பரவல் என்றால் உங்கள் எல்லோருக்கும் தொற்று வந்திருக்க வேண்டும். நீங்கள் என் முன்பு பேச முடியாது. நானும் உங்கள் முன்பு பேசிக்கொண்டிருக்க முடியாது. தொற்று ஏற்பட்டவர்களின் தொடர்பில் இருந்தவர்களைப் பரிசோதித்ததன் அடிப்படையிலேயே இவ்வளவு தொற்றாளர்களைக் கண்டுபிடித்துள்ளோம்.
சென்னை மக்கள்தொகை அதிகமான நகரம். குறுகிய தெருக்களை உடையது. ஆர்.கே.நகரில் 3 அடி சந்தில் 30 வீடுகள் உள்ளன. அங்கு ஒருவருக்கு ஏற்பட்டால் அனைவருக்கும் தொற்று ஏற்பட்டு விடுகிறது.
இந்தத் தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவக்கூடியது. இது புதிய வைரஸ் நோய் என்று அவர் கூறியுள்ளார்.