This Article is From Apr 28, 2019

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு? கேரளாவில் 3 பேரிடம் விசாரணை!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைவதற்காக கேரளாவை விட்டுச் சென்றவர்களுடன் இவர்கள் மூவரும் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

சிம் கார்டுகள், மொபைல் போன்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைய சென்றவர்களுடன் தொடர்பில் உள்ளனர்.
  • தேசிய புலனாய்வு முகமை அவர்களின் இல்லத்தில் சோதனை மேற்கொண்டது.
  • சிம் கார்டுகள், மொபைல் போன்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்கள் கைப்பற்றப்பட்டு
New Delhi/Thiruvananthapuram:

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கேரளாவின் காசர்கோட், பாலக்காடு பகுதிகளை சேர்ந்த 3 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக அவர்களது வீடுகளில் நடந்த சோதனையில் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைவதற்காக கேரளாவை விட்டுச் சென்றவர்களுடன் இவர்கள் மூவரும் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து, இவர்களுக்கு இலங்கையில் கடந்த 21ஆம் தேதி நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மூவரிடம் இருந்தும் சிம் கார்டுகள், மொபைல் போன்கள், மெமரி கார்டுகள், பென் டிரைவ்கள், அரபி மற்றும் மலையாளத்தில் கைகளால் எழுதப்பட்டுள்ள குறிப்புகள் உள்ளிட்ட சாதனங்கள் மற்றும் ஆவணங்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும், சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகீர் நாயக் எழுதிய புத்தகங்கள் மற்றும் அவரது மதப் பேச்சுகள் அடங்கிய டிவிடிக்கள் உள்ளிட்டவையும் இந்த சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ளன.

காசர்கோட்டில், அபூபெக்கர் சித்திக் மற்றும் அகமத் அர்ஃபத் ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையை தொடர்ந்து, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவர்களை கொச்சி அலுவலகத்திற்கு விசாரணைக்கு வர நோட்டீஸ் வழங்கியுள்ளனர். 3வது நபர் குறித்த விவரங்கள் இன்னும் வெளிவிரவில்லை.

கடந்த சில ஆண்டுகளாக, கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்ரவாத அமைப்பில் சேர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2016 ஆம் ஆண்டில் தென்மாநிலத்தை சேர்ந்த 6 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 21 பேர் இந்த பயங்கரவாத அமைப்பில் சேருவதற்காக சிரியாவுக்கு சென்றுள்ளனர்.
 

.