This Article is From May 29, 2020

தீர்ப்பில் திருத்தம்: ஜெ.தீபா, தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: உயர்நீதிமன்றம்

தீர்ப்பில் திருத்தம் செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் ஜெ.தீபா மற்றும் தீபக் ஆகியோரை ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகளாக அறிவித்துத் தீர்ப்பளித்துள்ளது.

Advertisement
தமிழ்நாடு Posted by

தீர்ப்பில் திருத்தம்: ஜெ.தீபா, தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: உயர்நீதிமன்றம்

ஜெ.தீபா, தீபக்கும் ஜெயலலிதாவின் 2ம் நிலை வாரிசுகள் என்பதை மாற்றம் செய்து நேரடி வாரிசுகள் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் உள்ளிட்ட சொத்துக்களை நிர்வகிக்க தனி நிர்வாகி ஒருவரை நியமிக்கக் கோரி அதிமுகவைச் சேர்ந்த புகழேந்தி மற்றும் ஜானகிராமன் ஆகியோர் கடந்தாண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் அவரது தம்பி ஜெ.தீபக் ஆகியோரும் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு, அவர்களும் நேரில் ஆஜராகி நீதிமன்றத்தில் விளக்கம் அளித்திருந்தனர்.

மேலும் தங்களை ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளாக அறிவிக்கக் கோரி தீபாவும், தீபக்கும் தனியாக மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இதனிடையே, ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பாக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்குகளின் தீர்ப்பை, நீதிபதிகள் நேற்று முன்தினம் காணொலி காட்சி வாயிலாக வழங்கினர்.

Advertisement

அதில், ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை முழுமையாக நினைவில்லமாக மாற்றும் திட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஜெயலலிதா இல்லத்தின் ஒருபகுதியை நினைவு இல்லமாகவும், மற்றொரு பகுதியை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. 

ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்க அவரின் அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் அவரது தம்பி ஜெ.தீபக் ஆகியோருக்கும் உரிமை உள்ளது. ஜெயலலிதா சொத்துக்கு தீபா, தீபக் இருவரையும் 2-ம் நிலை வாரிசுகளாக உயர்நீதிமன்றம் அறிவித்தது. 

Advertisement

இந்நிலையில் தீர்ப்பில் திருத்தம் செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் ஜெ.தீபா மற்றும் தீபக் ஆகியோரை ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகளாக அறிவித்துத் தீர்ப்பளித்துள்ளது.

இதற்கிடையே வேதா நிலையத்திற்கு ஜெ.தீபா செல்ல முயற்சிப்பதாகவும், அவ்வாறு அவர் செல்ல முயற்சித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைக்குறிப்பிட்ட நீதிமன்றம், நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை வேதா இல்லத்தில் நடைபெறுவதால் அங்கே சென்றால் பிரச்னை வரும் எனத் தீபா தரப்புக்கு அறிவுரை வழங்கினர்.

Advertisement