This Article is From Aug 10, 2019

சர்தார் படேல் பிறந்தநாளன்று யூனியன் பிரதேசங்களாக மாறும் ஜம்மூ காஷ்மீர், லடாக்!

காஷ்மீர் விவகார மசோதாவுக்கு காங்கிரஸைத் தவிர, திமுக, சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன

சர்தார் படேல் பிறந்தநாளன்று யூனியன் பிரதேசங்களாக மாறும் ஜம்மூ காஷ்மீர், லடாக்!

ராஜ்யசபாவில்தான் ஜம்மூ காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவது குறித்தும், இரண்டாக பிரிப்பது குறித்தும் முதலில் அறிவித்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. 

New Delhi:

ஜம்மூ - காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் யூனியன் பிரதேசங்களாக மாறும் என்று மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த இரண்டு யூனியன் பிரதேசங்களும், சர்தார் வல்லபாய் படேலின் 144வது பிறந்தநாளன்று செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 31 ஆம் தேதி படேலின் பிறந்தநாள் வருகிறது. 

ஜம்மூ காஷ்மீரை இரண்டாக பிரிப்பதற்கான மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஏற்கெனவே நிறைவேறிவிட்டது. அதற்கு ஜனாதிபதி ராத்நாத் கோவிந்தும் ஒப்புதல் கொடுத்துவிட்டார். 

கடந்த வாரம் இது குறித்தான மசோதா லோக்சபாவில் தாக்கல் ஆனது. அந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் சில எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன. சில எதிர்க்கட்சிகள் அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தன. ராஜ்யசபாவில் அதற்கு முன்னரே மசோதா நிறைவேற்றப்பட்டது. 

நாடாளுமன்றத்தில் மசோதா குறித்தான உரையாடலின் போது, காங்கிரஸும் பாஜக-வும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் சட்டப் பிரிவான 370-ஐக் கொண்டு வர யார் காரணம் என்பது குறித்து காரசாரமாக விவாதித்தன. 

ராஜ்யசபாவில்தான் ஜம்மூ காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவது குறித்தும், இரண்டாக பிரிப்பது குறித்தும் முதலில் அறிவித்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. 

இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னர் பல்லாயிரக்கணக்கான துணை ராணுவப் படையினர் காஷ்மீருக்கு அனுப்பப்பட்டனர். மேலும் அம்மாநில முன்னாள் முதல்வர்களான ஒமர் அப்துல்லா மற்றும் மெஹ்பூபா முப்டி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறை வைக்கப்பட்டனர். 

மேலும் மாநிலத்தில் மொபைல் மற்றும் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. மக்கள் கூட்டமாக கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. 

காஷ்மீர் விவகார மசோதாவுக்கு காங்கிரஸைத் தவிர, திமுக, சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ‘சம்பந்தப்பட்ட மக்களிடம் முறையாக கருத்து கேட்கப்படவில்லை' என்பதுதான் இக்கட்சிகளின் எதிர்ப்புக்குக் காரணமாக இருந்தது. 

மசோதா நிறைவேற்றத்தைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “ஜம்மூ காஷ்மீர் வெகு நாட்களுக்கு யூனியன் பிரதேசமாக இருக்காது. சீக்கிரமே அங்கு இயல்பு நிலை திரும்பும்” என்று கூறினார். 

.