ஆந்திர பிரதேச (Andhra Pradesh) மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு (Chandrababu Naidu), தனது அரசியல் எதிரியும் ஆந்திரத்தின் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டிக்கு (Jagan Mohan Reddy) எதிராக கறாரான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு சந்திரபாபு அளித்த பேட்டியில், “முதல்வர் ஜெகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் (YSR Congress Party) ஆட்சி, மக்கள் விரோதத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாற்றுக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மீது தேவையில்லாமல் வழக்குப் பதியப்பட்டு வருகின்றன. இதனால் தேவையில்லாத பல பிரச்னைகளை உருவாகி வருகின்றன. என்னிடம் யார் நல்ல முறையில் நடந்து கொள்கிறார்களோ, அவர்களிடம் நானும் நன்றாகவே நடந்து கொள்வேன். ஆனால், ஜெகன் ஒரு சைக்கோ (Psycho) போல நடந்து வருகிறார்.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் ஆட்சி மிகவும் மோசமாக உள்ளது. அந்தக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் ‘ஜெ வரி'-யை வசூலித்து வருகிறார்கள். நான் பல முதல்வர்களைப் பார்த்திருக்கின்றேன். ஆனால், ஜெகன் போன்ற ஒருவரைப் பார்த்ததே கிடையாது. இந்த அரசு, தனது நிலைப்பாட்டை மற்றும் நடமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும்” என்று கொதித்தார்.
ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் வரலாற்றுத் தோல்வியை சந்தித்தப் பிறகு முதன்முறையாக விசாகப்பட்டிணம் வந்துள்ளார் நாயுடு, கட்சியின் தோல்வி குறித்து நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
கடந்த 4 மாதத்திற்கு முன்னர் ஆந்திராவில் ஆட்சியமைத்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தனது கட்சியையும் கட்சியின் நிர்வாகிகளையும் தாக்கி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார் சந்திரபாபு. ஆளுங்கட்சியின் நடவடிக்கையால் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டு இருப்பதாகவும், 500 பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் நாயுடு கூறுகிறார்.
ஜெகன் ரெட்டியின் அரசுக்கு எதிராக கடந்த மாதம் மிகப் பெரும் போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டது தெலுங்கு தேசம் கட்சி. ஆனால், போராட்டம் நடைபெறுவதற்கு முன்னரே சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் நர லோகேஷ் ஆகியோர் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதேபோல அமராவதியில் இருக்கும் சந்திரபாபு நாயுடுவின் வீடு, சட்டத்துக்குப் புறம்பாக கட்டப்பட்டுள்ளது என்று கூறி அதை இடிக்கவும் நோட்டீஸ் அனுப்பியது ஆந்திர அரசு.
நடந்து முடிந்த ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 175 இடங்களில் 151-ஐ ஜெகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வென்றது. அதேபோல நாடாளுமன்றத் தேர்தலில் ஆந்திராவில் இருக்கும் 25 இடங்களில் 22-ஐ ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கைப்பற்றியது.
ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ் ராஜசேகர ரெட்டியின் மகன்தான் 46 வயதாகும் ஜெகன் மோகன் ரெட்டி. ராஜசேகர், 2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஹெலிகாப்ட்டர் விபத்தில் உயிரிழந்தார்.
(With inputs from ANI)