This Article is From May 30, 2019

தொண்டர்களின் ஆரவாரத்துடன் ஆந்திர முதல்வராக பதவியேற்றார் ஜெகன் மோகன் ரெட்டி!

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜெகனின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தொண்டர்களின் ஆரவாரத்துடன் ஆந்திர முதல்வராக பதவியேற்றார் ஜெகன் மோகன் ரெட்டி!

ராவ் மற்றும் ஜெகன் இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள டெல்லி புறப்படுகின்றனர். 

Vijayawada:

ஆந்திராவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸை பிரமாண்ட வெற்றிபெறச் செய்த ஜெகன் மோகன் ரெட்டி, இன்று அம்மாநில முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். தெலங்கானா, ஆந்திர பிரதேசத்தில் இருந்து பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து பதவியேற்கும் இரண்டாவது முதல்வர் ஜெகன் ஆவார். 

விஜயவாடாவில், ஜெகனின் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று மதியம் 12:23 மணிக்கு, ஆந்திர பிரதேச ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மன், ஜெகனுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

இன்று பதவியேற்றுக் கொள்ள திறந்தநிலை ஜீப் மூலம், நிகழ்ச்சி அரங்கிற்கு வந்தார் ஜெகன். அவருக்கு குழுமியிருந்த கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். 

ஜெகனை எதிர்த்துப் போட்டியிட்ட சந்திரபாபு நாயுடுவுக்கும் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அந்த அழைப்பை அவர் ஏற்க மறுத்துவிட்டார். 

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜெகனின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ராவ் மற்றும் ஜெகன் இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள டெல்லி புறப்படுகின்றனர். 

கடந்த ஞாயிற்றுக் கிழமை ஜெகன், பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை நேரில் சந்தித்தார். “இந்த நாட்டின் முதல் மற்றும் இரண்டாவது முக்கியமான நபர்களை சந்தித்தேன். ஆந்திராவுக்கு முடிந்தவரை உதவுமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டேன்” என்று சந்திப்புக்குப் பிறகு கூறினார் ஜெகன். 

ஆந்திராவில் இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடந்தது. நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை ஜெகனின் கட்சி, மொத்தம் இருக்கும் 25 இடங்களில் 22-ஐக் கைப்பற்றியது. சட்டசபைத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 175 இடங்களில் 151 இடங்களை கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது.

.