டெல்லி ஜாமியா பல்கலைக்கழக போராட்டக்காரர்கள் மீது டெல்லி காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினரா என்பது குறித்து பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் போலீசார் இடையே பெரும் வன்முறை ஏற்பட்டது. இதில், பல்வேறு மாணவர்களும் போலீசாரும் பலத்த காயமடைந்தனர்.
டெல்லி அரசால் நிர்வகிக்கப்படும் சஃப்தர்ஜங் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் என்.டி.டி.விக்கு அளித்த பேட்டியில், இரண்டு ஜாமியா போராட்டக்காரர்கள் புல்லட் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை என்ற காவல்துறையினரின் கூற்றுகளுக்கு முரணாக உள்ளது.
எனினும், காயமடைந்த இருவரும் தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது. துப்பாக்கி காயமடைந்தவர்களில் ஒருவர் ஜாமிய பல்கலைக்கழக பி.ஏ., மாணவர் அஜாஸ் (22) ஆவார். இவர் தற்போது பொது வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதை என்டிடிவி கண்டறிந்துள்ளது.
இதனிடையே, மருத்துவமனைக்கு வரும் பார்வையாளர்களை கண்காணிக்க டெல்லி காவல்துறை இரண்டு போலீசாரை வார்டில் நிறுத்தியுள்ளது.
அஜாஸின் குடும்பத்தினர் ஞாயிற்றுக்கிழமையன்று அவரது மார்பில் துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த போராட்டத்தில் அஜாஸூக்கு எந்த பங்கும் வகுக்கவில்லை என்றும் எனினும் அஜாஸ் தாக்கப்பட்டுள்ளார் என்று வேதனையடைந்தனர்.
இந்த காயங்களுக்கு காவல்துறை பலதரப்பட்ட விளக்கத்தையும் அளித்துள்ளது. இறுதியாக இவை கண்ணீர்ப்புகைக் குண்டுகளிலிருந்து ஏற்பட்ட சிறு காயங்கள் என்று தெரிவித்துள்ளது.
சஃப்தர்ஜங் மருத்துவமனையில் துப்பாக்கி காயமடைந்து அனுமதிக்கப்பட்ட மற்றொரு நபர் 23 வயதான ஷோயாப் கான் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளால் அவருக்கு காலில் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, மாணவர் அஜாஸ் தாக்கப்படுவது குறித்து அவரது செல்போனில் பதிவாகியுள்ள வீடியோவில், போலீசாரால் அவர் சுடப்படும் போது அவருக்கு அருகே எந்த கண்ணீர்புகைக் குண்டுகளின் வாயுவும் தென்படவில்லை.
டெல்லி ஹோலி மருத்துவமனையில் எடுக்கப்பட்ட மற்றொரு வீடியோவில், மூன்றாவது நபரான முகமது தமீன், அவரது தொடையில் புல்லட் காயமடைந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்படுகிறது.
தமீனின் மருத்துவமனை அறிக்கைப்படி, அவரது இடது காலில் இருந்து துப்பாக்கி குண்டு அகற்றப்பட்டதாக கூறுகிறது. என்டிடிவி சேகரித்த தகவல்படி, அவருக்கு இடது காலில் துப்பாக்கி காயம் ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
தொடர்ந்து, என்டிடிவியிடம் பேசய தமீன், தான் கண்ணீர்ப்புகை குண்டு காயம் அடைந்துள்ளதாக கூறப்படுவதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்தார். காவலர் ஒருவர் நெருங்கிய தூரத்தில் இருந்து தன்னை துப்பாக்கியால் சுட்டதாக அவர் கூறுகிறார்.