இந்தியாவில் கொரோனா பரவலுக்கு எதிராக பிரதமர் முன்மொழிந்துள்ள "மக்கள் ஊரடங்கு உத்தரவு" ஞாயிற்றுக்கிழமை நடைமுறைக்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், பிரதமர் நரேந்திர மோடி, கோடிக்கணக்கான இந்தியர்கள் நாள் முழுவதும் தங்களை பொது வெளியில் அனுமதித்துக்கொள்ளாமல் தனிமைப்பட்டு இருப்பது, கொரோனா வைரஸ் அல்லது கோவிட் -19 க்கு எதிரான "போராட்டத்திற்கு மிகப்பெரிய பலத்தைச் சேர்க்கும்" என்று ட்வீட் செய்துள்ளார்.
"இப்போதிலிருந்து சில நிமிடங்களில், மக்கள் ஊரடங்கு தொடங்குகிறது. நாம் அனைவரும் இந்த ஊரடங்கு உத்தரவின் ஒரு பகுதியாக இருப்போம், இது COVID-19 அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்திற்கு மிகப்பெரிய பலத்தை நமக்கு கொடுக்கும். இப்போது நாம் எடுக்கும் நடவடிக்கைகள் வரவிருக்கும் காலங்களில் நமக்கு உதவும், " என்றும் பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
இந்தியாவின் கொரோனா தொற்றை எதிர்கொள்வது குறித்து வியாழக்கிழமை நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர், ஞாயிறன்று சுய தனிமைப்படுத்தலின் ஒரு பகுதியாகக் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.
"இதற்கு எந்த சிகிச்சையும் இல்லை, எனவே நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். நாம் மக்கள் திரளை தவிர்த்து வீட்டிலேயே இருக்க வேண்டும். சமூக தொலைவு மிக முக்கியமானது. நீங்கள் வழக்கம் போல் சுற்றித் திரிந்து, உங்களுக்கு ஆபத்து ஏற்படாது என்று நினைத்தால், அது தவறானது "நீங்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஆபத்தை விளைவிக்கிறீர்கள்" என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்குத் தனது 29 நிமிட உரையில் கூறியிருந்தார்.
இந்தியாவில் கோவிட் -19 தொற்றுகளின் எண்ணிக்கை சனிக்கிழமை 315 ஆக உயர்ந்துள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளில் கையாளும் வணிகங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் தவிர, மற்ற அனைத்தும் இன்றும் மூடப்படும். நாடு முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்படும். எந்த ரயில்களும் - நீண்ட தூரம் அல்லது புறநகர் - ஓடாது, என்று ரயில்வே கூறியுள்ளது. ஆனால், ஏற்கனவே ஓடும் விமானங்கள் பகலில் நிறுத்தப்படாது. இண்டிகோ மற்றும் கோ ஏர் உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் குறைந்தபட்ச திறனில் இயங்கும் அல்லது அனைத்து விமானங்களையும் ரத்து செய்வதாகக் கூறியுள்ளன. டெல்லி, பெங்களூரு மற்றும் பிற நகரங்களில் எந்த மெட்ரோ ரயில்களும் இயக்கப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.