தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம், 50.80 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வருவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார். நேற்று சட்டசபையில் உரையாற்றிய அவர், இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
“முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 50.80 கோடி ரூபாயில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. அதற்கான கட்டுமானப் பணிகள் விரைவில் நிறைவு செய்யபடும்,” என்று உரையில் கூறினார் ஆளுநர் புரோகித்.
மதுரையில் இருக்கும் கேகே நகர் பகுதியில், ஜெயலலிதாவின் உருவச் சிலையை கட்டும் பணி தற்போது நடந்து வருகிறது.
முன்னதாக இந்த சிலை நிறுவுதலுக்கு திமுக எம்எல்ஏ சரவணன், மறுப்புத் தெரிவித்திருந்தார். அவர் காவல் துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சிரயருக்கும் இது குறித்து அளித்தப் புகாரில், “மதுரையின் வர்த்தகப் பகுதியான கேகே நகரில் ஜெயலலிதாவின் புதிய சிலையை வைக்க அனுமதிக்கக் கூடாது. அங்கு ஏற்கெனவே, அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும் முதல்வருமான எம்ஜிஆரின் சிலை இருக்கிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ஜெயலலிதா, கடந்த 2016 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி, சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இயற்கை எய்தினார்.