ஜேஎன்யூ பல்கலைக்கழக வளாகத்தில் வன்முறை ஏற்படுதவற்கு முன்பே, பல்கலைக்கழக வளாகத்திற்குள் தெரியாத நபர்கள் பலர் கூடியுள்ளதாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தாகவும், எனினும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஜேஎன்யூ மாணவர் சங்க தலைவர் அயிஷி கோஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், நேற்றைய வன்முறையில் 34 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் படுகாயமடைய பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகதீஷ் குமாரும் காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில், வளாகத்தில் தெரியாத நபர்கள் பலர் கூடியிருந்ததால் நாங்கள் பாதுகாப்பாக உணரவில்லை என்று போலீசாரிடம் தெரிவித்திருந்தோம். ஆனால் போலீசார் அதனை கண்டுகொள்ளவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை மாலை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பு (JNUTA)அமைதியாக வழியில் போராடுதவற்காக கூடியிருந்தது. அப்போது, முகமூடி அணிந்த கும்பல் அங்கு வந்ததை தொடர்ந்து வன்முறை தொடங்கியது. மாணவர்களின் கட்டண உயர்வை கண்டித்து பல்கலைக்கழகத்திற்குள் அமைதியான முறையில் போராடிக்கொண்டிருந்தோம், அப்போது, சபர்மதி விடுதிக்குள் நுழைந்த அந்த முகமூடி கும்பல் இரும்பு கம்பிகளை வைத்து தாக்குதல் நடத்தியது என்று அவர் கூறினார்.
இந்த தாக்குதல் நடந்த சில மணி நேரங்களிலே மாணவர் சங்க தலைவர் அயிஷி கோஷ் தாக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. அதில், அவர் தலையில் இரத்தம் சொட்ட அமர்ந்திருப்பார். மேலும், தான் முகமூடி அணிந்த கும்பலால் தாக்கப்பட்டதாகவும், அவர்கள் கொடூரமாக தாக்கியதாகவும் அவர் அந்த வீடியோவில் கூறினார்.
தொடர்ந்து, தனக்கு கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும், மாணவர்கள் உடனடியாக என்னை மருத்துவனை அழைத்துச் செல்ல ஆம்புலான்ஸூக்கு தகவல் தெரிவித்தனர் என்றார். தொடர்ந்து டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதனிடையே, ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் நடந்த முகமூடி கும்பல் தாக்குதலை 26/11 மும்பை தீவிரவாத தாக்குதலுடன் ஒப்பிட்ட மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, இது கோழைத்தனமான செயல் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் டெல்லி காவல்துறையினர் விரைவாகவும், தீர்க்கமாகவும் செயல்படுமாறு கேட்டுக்கொண்ட அவர், அவ்வாறு காவல்துறை செயல்பட தவறினால், ஏற்கனவே ஜாமியா மாணவர்கள் போராட்டத்தை கையாண்டதற்காக கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்து அவர்களிடம் கேள்வி எழும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் பயத்திலும் கோபத்திலும் உள்ளனர். அவர்கள் யாரும் கோழைகள் அல்ல. இளைஞர்களைத் தூண்டிவிட்டு வெடிகுண்டுகளை எரிய வேண்டாம். காவல்துறையினர் செயல்படவில்லை என்றால் காவல்துறை குறித்து கேள்வி எழ தான் செய்யும் என்று அவர் கூறியுள்ளார்.