டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நடந்திருக்கும் தாக்குதல் தொடர்பாக மாணவர் சங்க தலைவர் அய்ஷ் கோஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்றும், தனக்கு எதிராக பொய் வழக்கு புனையப்பட்டிருப்பதாகவும் அய்ஷ் கோஷ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக NDTVக்கு அவர் அளித்த பேட்டியில், 'நான் வன்முறையில் ஈடுபடவில்லை. எனக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் முதலில் போலீசார் ஆதாரத்தை வைத்திருக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.
ஞாயிறன்று மாலை நடைபெற்ற ஜே.என்.யூ. பல்கலைக் கழக தாக்குதல் தொடர்பாக அய்ஷ் கோஷ் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முகமூடி அணிந்திருந்த கும்பல் ஒன்று, பல்கலைக் கழகத்திற்குள் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியிருந்தது. இந்த சம்பவத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் என சுமார் 30 பேர் காயம் அடைந்திருந்தனர்.
பல்கலைக் கழக நிர்வாகிகள் அளித்த புகாரின்பேரில் அய்ஷ் கோஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்தப் புகார் முன்கூட்டியே அளிக்கப்பட்டிருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் தலைவர் அய்ஷ் மற்றும் 26 மாணவர்கள் மீது, பல்கலைக் கழகத்தில் உள்ள Server அறையை சேதப்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஜனவரி 1 மற்றும் 4 ஆகிய 2 நாட்களில் நடந்திருப்பதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தவிர்த்து பல்கலைக் கழக பாதுகாவலர்களை தாக்கியது, கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தி மாணவர்களை தேர்வுக்கு பதிவு செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட புகார்களும் அய்ஷ் கோஷ் மீது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகார்களுக்கு ஆதாரம் இல்லை என்று கூறியுள்ள அய்ஷ், இவை அனைத்தும் பல்கலைக் கழக நிர்வாகத்தால் பொய்யாக புனையப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
'சர்வர் அறை தாக்கப்பட்டது போன்ற எந்த சம்பவமும் நடக்கவில்லை. என்னிடம் வாய்ஸ் ரிக்கார்டு அதாரங்கள் உள்ளன. சர்வர் அறையில் பாதுகாவலர்கள், மாணவர்களை தாக்கிய சம்பவம்தான் நடந்தது. ஏ.பி.வி.பி.யை சேர்ந்தவர்கள்தான் வந்து, சதீஷை கடுமையாக தாக்கினர்' என்று தெரிவித்துள்ளார்.