வரும் திங்கள் முதல் உள்ளூர் விமானப் போக்குவரத்து தொடங்கப்படவுள்ள நிலையில், அடுத்த 3 மாதங்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இதே கட்டணத்தை விமான நிறுவனங்கள் வசூலிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக விமானப் போக்குவரத்து சேவை கடந்த 2 மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பாதிப்பு குறையாத சூழலில், பொருளாதார வீழ்ச்சியை சரி செய்யும் விதமாக உள்ளூர் விமானப் போக்குவரத்து திங்கள் முதல் தொடங்கவுள்ளது. இதற்கான கட்டண விவரங்களை விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியதாவது-
0-30 நிமிடங்கள், 30 - 60 நிமிடங்கள், 60-90 நிமிடங்கள், 90-120 நிமிடங்கள், 120-150 நிமிடங்கள், 150-180 நிமிடங்கள், 180-210 நிமிடங்கள் என 7 வகைகளாக விமானங்கள் பிரிக்கப்படும். இதன் அடிப்படையில் கட்டணங்கள் இருக்கும்.
உதாரணமாக டெல்லியில் இருந்து மும்பைக்கான விமான கட்டணம் குறைந்தது ரூ. 3,500-ல் இருந்து அதிகபட்சமாக ரூ. 10 ஆயிரமாக இருக்கும். அடுத்து வரும் 3 மாதங்களுக்கு இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். திங்கள் முதல் 3-ல் ஒரு பங்கு உள்ளூர் விமானப் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது. பலவித கட்டுப்பாடுகளுடன் விமானங்கள் இயக்கப்படவுள்ளன.
நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.12 லட்சத்தை தாண்டி விட்டது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,609 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு 3,435 பேர் உயிரிழந்துள்ளனர்.
மும்பை, டெல்லி, அகமதாபாத் ஆகிய நகரங்களில்தான் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.