Read in English
This Article is From Jun 05, 2018

'காலா' ரிலீஸுக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகிய ரஜினிகாந்த்!

இந்த வாரம் வியாழக்கிழமை `காலா' திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது.

Advertisement
தெற்கு ,

இந்த வாரம் வியாழக்கிழமை `காலா' ரிலீஸ் ஆகிறது

Highlights

  • கர்நாடக அரசு, காலா-வுக்கு தடை விதித்துள்ளது
  • இதையடுத்து, ரஜினி சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு
  • நேற்று கமல், கர்நாடக முதல்வர் குமாரசாமியைச் சந்தித்தார்
Chennai:

இந்த வாரம் வியாழக்கிழமை `காலா' திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. ஆனால், கர்நாடக மாநிலத்தில் இந்தப் படத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, `காலா' படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கோரி ரஜினி சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

வழக்கம் போல் இந்த ஆண்டும், தமிழகத்திற்கு உரிமைப்படி தர வேண்டிய நீரை காவிரியில் இருந்து திறந்துவிடவில்லை கர்நாடகா. இதையடுத்து, இந்த விஷயம் குறித்து உச்ச நீதிமன்றத்தை அணுகியது தமிழக அரசு. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு சென்ற மாதம் உச்ச நீதிமன்றம், `மத்திய அரசு பல மாநிலங்களுக்குச் சொந்தமான காவிரி நீரை பங்கிடுவதற்கு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்' என்று கூறி வழக்கை முடித்து வைத்தது. இதையடுத்து, சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தது. இன்னும் காவிரி நீர் தமிழகத்தை வந்தடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை இரு மாநில அரசியல் கட்சித் தலைவர்களும் பிரபலங்களும் காவிரி குறித்து தொடர்ந்து கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்த விஷயத்தில் ரஜினிகாந்த், `சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்துக்கு உரிமையான காவிரி நீரை திறந்து விட வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார். இது கர்நாடக அரசியல் தலைவர்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ரிலீஸ் ஆகப் போகும் `காலா' திரைப்படத்துக்கு தடை விதிக்குமாறும் அரசுக்கு அழுத்தம் கொடுத்தனர். எதிர்பார்த்தது போலவே காலா-வுக்கு கே.எஃப்.சி.சி தடை விதித்து உள்ளது.

கே.எஃப்.சி.சி தலைவர் கோவிந்து காலா-வின் தடை குறித்து, `காலா-வுக்கான தடையில் எந்த மாற்றமும் இருக்காது. ஏனென்றால், ரஜினியும் அவரின் கருத்துக்கு மன்னிப்புக் கேட்கப் போவதில்லை. நாங்களும் அவரை மன்னிக்கப் போவதில்லை' என்றுள்ளார்.

நேற்று நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமியை சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கமல், `காலா திரைப்படம் குறித்தோ அதன் தடை குறித்து குமாரசாமியிடம் நான் எதையும் பேசவில்லை. அது திரைத் துறை சார்ந்த் விஷயம். அந்தத் துறை சார்ந்தவர்கள் தான் இதற்கு சுமூகமான முடிவு எடுக்க வேண்டும். நான் காவிரி நீர் உரிமையைப் பற்றி தான் அவரிடம் பேசினேன். திரைப்படத்தை விட காவிரி நீர் தான் முக்கியம்' என்று கருத்து தெரிவித்தார். 


 
Advertisement