கலைஞர் அரங்கை கொரோனா வார்டாக பயன்படுத்திக் கொள்ளலாம் - மு.க.ஸ்டாலின்
ஹைலைட்ஸ்
- கலைஞர் அரங்கை கொரோனா வார்டாக பயன்படுத்திக் கொள்ளலாம்
- திமுக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் ஒரு மாதச் சம்பளத்தை நிதியதவி அளிப்பு
- முதல்வர் நிவாரண நிதிக்கு திமுக ஒரு கோடி ரூபாய் நிதி அளிப்பு
அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த பயன்படுத்திக் கொள்ளலாம் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, திமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், "திமுக அறக்கட்டளைக்குச் சொந்தமான அண்ணா அறிவாலயத்தின் வளாகத்தில் இருக்கும் கலைஞர் அரங்கத்தை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரை தனிமைப்படுத்த அரசு சார்பில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று திமுக அறக்கட்டளையின் தலைவரும், மேலாண்மை அறங்காவலருமான மு.க.ஸ்டாலின் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்புதல் கடிதத்தை, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷிடம் திமுக சார்பில் எம்.எல்.ஏ.க்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் வழங்கினார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகளுக்காக பல்வேறு அரசியல் கட்சிகள் நிதியுதவி அறிவித்து வருகின்றன. ஏற்கெனவே, திமுக எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தங்கள் ஒரு மாதச் சம்பளத்தை நிதியுதவியாக அளிப்பார்கள் என, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகளுக்காக திமுக அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி அளிக்கப்படுவதாகவும் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கத்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்திக்கொள்ளப் பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் சிரமப்படுவர்கள் உதவிக்கு தொடர்பு கொள்ள திமுக இளைஞர் அணி சார்பில் 93618 63559 என்ற எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.