This Article is From Jun 03, 2019

கலைஞர் 96வது பிறந்தநாள் சிறப்பு கட்டுரை: “நானும் பத்திரிகைக்காரன்!”

தனக்கு முன்பும் பின்பும் யாரும் எட்ட முடியாத சாதனைகளைப் புரிந்துவிட்டு அமைதியாக இன்று ஓய்வெடுத்துக்கொண்டிருப்பவர்

கலைஞர் 96வது பிறந்தநாள் சிறப்பு கட்டுரை: “நானும் பத்திரிகைக்காரன்!”

தனக்கு முன்பும் பின்பும் யாரும் எட்ட முடியாத சாதனைகளைப் புரிந்துவிட்டு அமைதியாக இன்று ஓய்வெடுத்துக்கொண்டிருப்பவர். இந்திய ஒன்றியத்தில் தனித்துவம் மிக்க மாநிலமாக தமிழ்நாட்டை வடிவமைத்த சிற்பிகளுள் ஒருவர். பாஸ்கர் என்கிற எலக்ட்ரீஷியனின் விருப்பத்தின் பேரில் எம்.ஆர்.ராதாவால் ‘கலைஞர்' என்று பட்டம் பெற்றவர். இந்திய அரசியல் அரங்கின் ஒப்பற்ற ஆளுமையான மு.கருணாநிதிக்கு வயது 95.

16 வயதில் பத்திரிகையாளர், 20 வயதுகளில் வெற்றிகரமான வசனகர்த்தா, 32 வயதில் தேர்தலில் வென்று சட்டசபைக்குள் சென்றவர், 13 முறை தொடர்ச்சியாக வென்று 95 வயதிலும் சட்டமன்ற உறுப்பினராக தொடர்பவர், 38வயதில் திமுக பொருளாளர், 49 ஆண்டுகளாக திமுக தலைவர், ஐந்து முறை தமிழக முதலமைச்சர் என கருணாநிதியின் சாதனைகள் எண்ணிலடங்கா. அரசியல் களத்தில் நின்று போராட தனக்கு தேவையான படைக்கலன்களுள் ஒன்றாக எழுத்தை குறிப்பிடும் கருணாநிதியின் பத்திரிகையுலக செயல்பாடுகளை இக்கட்டுரை தொகுக்க முற்படுகிறது.

திராவிட இயக்க இதழ்கள்

திராவிட இயக்கம் தன் கருத்துகளை மக்களிடம் பரப்பவும் அவர்களை அரசியல் விழிப்புணர்வு அடையச் செய்யவும் பத்திரிகைகளையும் இதழ்களையும் தீவிரமாகப் பயன்படுத்தியது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கில மொழிகளில் வெளியான திராவிட இயக்க இதழ்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 275. இவற்றுள் திராவிட தீபிகை (1847), இரட்டைமலை சீனிவாசனின் பறையன்(1894), அயோத்திதாசப் பண்டிதரின் ஒரு பைசாத் தமிழன் (1907) ஆகியவை இயக்கத்தின் முன்னோடி இதழ்களாகக் கருதப்படுகின்றன.

சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின் நல உரிமைகளுக்காக டி.எம்.நாயர், பிட்டி.தியாகராயர், சி.நடேசன் ஆகியோர் இணைந்து தென்னிய நல உரிமைச் சங்கத்தை 1916-ல் உருவாக்கினர். திராவிடன், ஆந்திர பிரகாசினி, ஜஸ்டிஸ்ஆகிய பத்திரிகைகள் முறையே தமிழ், தெலுங்கு, ஆங்கில மொழிகளில் இந்த அமைப்பிலிருந்து வெளிவந்தன. கட்சியின் அதிகாரபூர்வ பெயரால் அல்லாமல் அது நடத்திய ஜஸ்டிஸ் (நீதி) பத்திரிகையின் பெயரால் “நீதிக்கட்சி” என்று அழைக்கப்பட்டது பத்திரிகையின் தாக்கம் எந்தளவுக்கு இருந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

நீதிக் கட்சியாக உருவெடுத்திருந்த தென்னிந்திய நல உரிமைச் சங்கமும் சுயமரியாதை இயக்கமும் 1944-ல் “திராவிடர் கழகம்” என்ற பெயரில் பெரியார் தலைமையில் ஒன்றிணைகின்றன. பெரியாரை ஆசிரியராகக் கொண்டு பகுத்தறிவு கருத்துகளைத் தாங்கிவந்த குடி அரசும், 1942–ல் தொடங்கி 1963 வரை அண்ணாதுரை நடத்திய திராவிட நாடும் திராவிட இயக்க இதழ்களில் முக்கியத்துவம் வாய்ந்தவை.

கருணாநிதியின் வருகை

திராவிட இயக்கத்தின் செயல்பாடுகள் உச்சம் பெற்றிருந்த சமயத்தில் இயக்கத்தின் பத்திரிகைகள் பகுத்தறிவு, சமூக நீதி சிந்தனைகளை மக்களிடம் முன்னெடுத்துக்கொண்டிருந்த வேளையில் 1941-ல், கருணாநிதி தன் 16 வயதில் “மாணவ நேசன்” என்கிற கையெழுத்து ஏட்டினை தொடங்கி பத்திரிகையாளராக எழுத்துலகில் அடியெடுத்து வைக்கிறார். கையெழுத்து பத்திரிகைகள் குறித்து, “கைராட்டையால் நாடு முன்னேறும் என்பது எவ்வளவு பைத்தியக்காரத்தனமோ அவ்வளவு பைத்தியக்காரத்தனம் இந்த கையெழுத்து ஏடு நடத்துவது” என்கிற பாரதிதாசனின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக, “மாணவர்கள் நடத்தும் கையெழுத்து ஏடுகளால் நாடு ஒரேயடியாக முன்னேறிவிடுமென்று யாரும் கூறவில்லை. சிறுதுளி பெருவெள்ளம். பலர் சேர்ந்ததே நாடு. அந்த நாட்டின் எதிர்காலத்திற்குரியவர்கள் மாணவர்கள். அவர்கள் தங்கள் எண்ணங்களைச் செம்மைப்படுத்திக்கொள்ள, மெருகேற்றிக்கொள்ள, கையெழுத்து ஏடுகள் நல்ல வாய்ப்பு அளிக்கின்றன என்பதே என் நம்பிக்கை. இளமைப் பருவத்தில் எழுதுகிறவர்களைப் பெரிய பத்திரிகைகள் எடுத்துக்கொள்வதில்லை. அந்தப் பத்திரிகைகளுக்கு எழுதுவது போன்ற தகுதியைக் கையெழுத்துப் பிரதியில் ஏற்படும் பயிற்சி தாராளமாகத் தருகிறது என்பேன்” என்று கருணாநிதி எழுதுகிறார்.

அன்றைய காலகட்டத்து கையெழுத்து ஏடுகளைப் போலல்லாமல் குறைந்தது ஐம்பது பிரதிகள் என மாதத்திற்கு இரண்டு வெளியீடுகளாக, எட்டு பக்கத்திற்கு குறையாமல், ‘டெம்மி பேப்பர்' அளவில் ஏழெட்டு வாரங்கள் ‘மாணவ நேசன்' வெளியாகிருக்கிறது. ஏப்ரல் 26, 1942 அன்று வெளியான திராவிட நாடு இதழில் கைம்பெண் மறுமணத்தை வலியுறுத்தி “இளமைப்பலி” என்ற தலைப்பில் கருணாநிதி எழுதிய கட்டுரை மிகுந்த கவனத்தைப் பெற்றது: “ஆகவே,செந்தமிழ்ச்செல்வா! மங்கையர்தான் நம் நாட்டின் பொக்கிஷம் என்பதை மறவேதே! அவர்கள் வாழ்வைக் கெடுக்காதே! மறுமணத்தை மறுத்து அவர்கள் இளமையைப் பலியிடாதே!”.

dfkvalro

பெரியாரின் ‘குடி அரசு' இதழில் உதவி ஆசிரியாராக சிறிதுகாலம் பணியாற்றிய கருணாநிதி, நவம்பர் 11, 1945-ல் குடி அரசு இதழில் ‘மூனாகானா' என்கிற பெயரில் “அண்ணாமலைக்கு அரோகரா” என்றும், ‘ஜனநாயகம்' இதழில் ப.ஜீவானந்தம் எழுதிய “ஈரோட்டுப்பாதை” கட்டுரைக்கு மறுப்பாக ‘பேனாமுள்' என்கிற பெயரில் “எழுதவில்லை” என்றும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

செய்தி வாசிப்பாளாராகவும்கூட கருணாநிதி செயல்பட்டிருப்பது மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுக்கும். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவத்தின் மூலம் பிரிட்டிஷ் அரசை அன்றைய இந்திய எல்லைப் பகுதிகளில் இருந்து தாக்க முற்பட்ட சூழலை விளக்கி திருவாரூரில் பள்ளி மாணவராக இருந்த கருணாநிதி செய்தியாக வாசித்துள்ளார்.

“நான் பெற்ற முதல் குழந்தை”

மாணவ நேசனை பிரதியெடுப்பதில் உள்ள சிரமங்களைக் களைய முற்றப்பட்டபோது தோன்றிய யோசனையின் விளைவுதான் முரசொலி. துண்டு வெளியீடுகளாக ஆகஸ்ட் 10, 1942-ல் முரசொலியைத் திருவாரூரில் தொடங்கியபோது கருணாநிதிக்கு வயது 18. அச்சகத்திலிருந்து முரசொலியை மூட்டைகளாக கட்டிக்கொண்டு ஓடம்போக்கி ஆற்றின் மூங்கில் பாலத்தை கடந்து விஜயபுரத்தில் இருந்து திருவாரூரில் இருந்த முரசொலி அலுவலகத்திற்கு தன்னுடைய நண்பர் கனகசுந்தரத்துடம் நடந்தே வந்த முரசொலியின் அந்த ஆரம்ப நாட்களை கருணாநிதி பல்வேறு சமயங்களில் நினைவுகூர்கிறார்.

uuc1aja8

துண்டு வெளியீடுகளாக முரசொலி வந்துகொண்டிருந்த சமயம். அக்டோபர் 5, 1944-ல் “வருணமா? மானமா?” என்ற தலைப்பில் சிதம்பரத்தில் நடைபெறவிருந்த வருணாசிரம மாநாட்டைக் கண்டித்து முரசொலியில் கருணாநிதி எழுதிய கட்டுரை பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, கருணாநிதி சிதம்பரத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டது.

தமிழ் இதழியலில் கேள்வி பதிலையும், கடித முறையையும் கையாண்டதில் கருணாநிதிக்குத் தனித்த இடம் உண்டு. அண்ணாவின் “தம்பிக்கு…” கடித முறையை ஒற்றி “உடன்பிறப்பே” என்று கருணாநிதி எழுதும் கடிதம் வெளியாகும் நாட்களில் முரசொலியில் விற்பனை வழக்கத்தைவிட கூடுதலாக இருந்திருக்கிறது. 1977 ஆரம்பித்து அக்டோபர் 2016 வரை அவர் எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை 3517. கருணாநிதி ஒரு ஓவியரும்கூட. முரசொலியின் ஆரம்ப காலங்களில் அட்டைப்படங்களையும் சமயங்களில் கேலிச்சித்திரங்களையும்கூட வரைந்திருக்கிறார். துண்டு வெளியீடுகளாக திருவாரூரிலிருந்து வந்துகொண்டிருந்த முரசொலி ஜனவரி 14, 1948-லிருந்து வார இதழாக மாற்றம் பெற்றது. 1954-ல் சென்னைக்கு மாற்றப்பட்ட முரசொலி அலுவலகம், செப்டம்பர் 17, 1960-லிருந்து தினசரியாக வெளியாகிறது.

அரசியல் தலைவராகவும் பத்திரிகையாளராகவும் கருணாநிதியின் வாழ்வில் மிக முக்கியமான காலகட்டங்களுள் அவசர நிலை அமலில் இருந்த காலமும் ஒன்று. இந்திரா காந்தியின் சர்வாதிகாரப் போக்கினையும் அவசர நிலை பிரகடனத்தையும் மிகக் கடுமையாக எதிர்த்தவர்களுள் முக்கியமானவர் கருணாநிதி. அதனால், ஆட்சியும் கலைக்கப்பட்டு கட்சிக்கும் அச்சுறுத்தல் உண்டானது. பத்திரிகைகள் கடுமையான தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. வெறுத்துபோன பத்திரிகையாளர் கருணாநிதி, 1976-ம் ஆண்டு ஜூன் 2, 3 தேதிகளில் வெளியான முரசொலியில், “வெண்டைக்காய் உடலுக்கு நல்லது”, “விளக்கெண்ணெய் சூட்டைத் தணிக்கும்” போன்ற செய்திகளை வெளியிட்டார்.உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் அமலில் இருந்த அவ்வேளையில் அவசர நிலையை எதிர்த்த எல்லோரும் கேள்விகள் இன்றி கைதுசெய்யப்படவே, “அண்ணா நினைவுநாளன்று மலர் வளையம் வைக்க வர இயலாதோர் பட்டியல்” என்று கைதான திமுக உறுப்பினர்களின் பெயரை மிகச் சாதூர்யமாக முரசொலியில் பிரசுரித்தார்.

e6d7hecg

“பிரதான பத்திரிகைகள் சுயமரியாதை இயக்கத்தின் வலிமையை உணரவோ, அங்கீகரிக்கவோ இல்லை. எனவேதான் சுயமரியாதை இயக்கத்தினர் தாங்களாகவே பத்திரிகைகளைத் தொடங்கி நடத்தினர். இதை முதலில் நினைவில் வைக்க வேண்டும். அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கிய ஜனநாயகத்துக்கு அடையாளமாக உருவெடுத்ததுதான் 75 ஆண்டு கால வரலாறு கொண்ட கருணாநிதியின் முரசொலி” என்று பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன்எழுதுகிறார்.

முதலமைச்சராக ஆட்சியில் இருந்தபோதிலும் எதிர்கட்சித் தலைவராக ஆட்சியில் இல்லாமல் போனாலும் கருணாநிதியின் அன்றாட அலுவல் முரசொலி அலுவலகத்திற்கு வருகைதராமல் நிறைவுறாது. பயணங்களிலும்கூட தவிர்க்க முடியாத சூழல்கள் தவிர்த்து எல்லா காலங்களிலும் தொடர்ச்சியாக எழுதிவந்த கருணாநிதி எழுதிய பக்கங்களின் மொத்த எண்ணிக்கை லட்சங்களைத் தாண்டும். “நான் பெற்ற முதல் குழந்தை” என்று முரசொலியை சொல்லும் அளவுக்குக் கருணாநிதியின் வாழ்வில் முரசொலி முக்கியத்துவம் பெற்றிருந்திருக்கிறது.

பாடம்

“மனிதன், நூறு ஆண்டுகளுக்கும் மேல் வாழ்வது என்பது அதிசயச் செய்திகளுள் ஒன்று. தொண்ணூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்பவர்களே மிகச் சிலர் தான்” என்று நெஞ்சுக்கு நீதி முதல் பாகத்தின் முன்னுரையில் எழுதிய கருணாநிதி இன்று நூறு வயதை நெருங்கிக்கொண்டிருக்கிறார். அவருடைய வாழ்க்கையானது ஏறக்குறைய கடந்த ஒரு நூற்றாண்டு சமூக அரசியல் நிகழ்வுகளின் சாட்சி. பத்திரிகையாளராக வாழ்நாளெல்லாம் அந்நிகழ்வுகளை பதிவு செய்தும் இருக்கிறார். அவர் பங்களிப்பு செய்த துறைகளில் எல்லாம் இன்றைய இளம் தலைமுறையினர் கற்றுக்கொள்ள விஷயங்கள் உள்ளதைப் போல பத்திரிகையாளர்களும் கருணாநிதியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய மூன்று முக்கியமான விஷயங்களைக் கவிஞர் சுகுமாரன் பட்டியலிடுகிறார்:

1) எல்லாவற்றையும் பற்றிய பொது அறிவு. பத்திரிகையில் இடம்பெறும் சின்னச் சின்ன செய்திகளும் கவனத்துக்குரியவை. அவையும் முக்கியமானவையே என்கிற பார்வை.

2) ஒரு பத்திரிகையாளனாக வாசகர்களை மதிக்க வேண்டும். தனது கருத்துகளை சரியாக வாசகர்களை சென்று சேர்க்க வேண்டும்.

3) பிழை இருக்கக் கூடாது. இதற்கான பல்வேறு உதாரணங்களைக் கருணாநிதியே பல்வேறு சமயங்களில் தன் பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.

9jak74k

ஆட்சிக்கு வந்த நான்கு ஆண்டுகளில் ஒருமுறைகூட பத்திரிகையாளர்களை சந்திக்காத பிரதமர் இருக்கும் நாட்டில், முதலமைச்சர் என்றாலும்கூட தான் ஆட்சியில் இருக்கும்போதும் இல்லாத பல்வேறு சமயங்களிலும் பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தவர், கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் பத்திரிகையாளர்களுடன் உரையாடத் தயங்காதவர் கருணாநிதி. பத்திரிகையாளர்களுடனான அவருடைய நெருக்கத்திற்கான காரணம், சமயங்களில் அவரே சொல்வதுபோல, “நானும் பத்திரிகைக்காரன்” என்பதுதானோ!

- சு.அருண் பிரசாத்

.