This Article is From Apr 13, 2020

“எதற்காக இன்னும் காத்திருக்கிறீர்கள் மாண்புமிகு சி.எம்…”- கொதிக்கும் கமல்… காரணம் என்ன?

“மற்ற மாநில முதல்வர்கள் ஊரடங்கு குறித்து தன்னிச்சையாக முடிவெடுக்கும் போது, எதற்காக காத்திருக்கிறீர்கள் மாண்புமிகு முதல்வரே"

“எதற்காக இன்னும் காத்திருக்கிறீர்கள் மாண்புமிகு சி.எம்…”- கொதிக்கும் கமல்… காரணம் என்ன?

"என் குரல் என்பது மக்கள் மத்தியிலிருந்து வரும் அவர்களின் குரல்"

ஹைலைட்ஸ்

  • முன்னதாக, கொரோனா விவகாரத்தில் மோடியை விமர்சித்தார் கமல்
  • தற்போது தமிழக முதல்வரை விமர்சித்துள்ளார்
  • தமிழக முதல்வர் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்: கமல்

இந்திய அளவிலும் தமிழக அளவிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. முன்னதாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது மத்திய அரசு. அந்த ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவுக்கு வருகிறது. மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஒடிசா மற்றும் பஞ்சாப் மாநில அரசுகள், தாமாகவே முன்வந்து, ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளன. இதை மேற்கோள்காட்டி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல், தமிழக அரசையும் முடிவெடுக்கச் சொல்லி வலியுறுத்தியுள்ளார். 

கமல், “மற்ற மாநில முதல்வர்கள் ஊரடங்கு குறித்து தன்னிச்சையாக முடிவெடுக்கும் போது, எதற்காக காத்திருக்கிறீர்கள் மாண்புமிகு முதல்வரே. உங்களின் எஜமானரின் உத்தரவுக்காகவா?,

என் குரல் என்பது மக்கள் மத்தியிலிருந்து வரும் அவர்களின் குரல். நாற்காலியில் அமர்ந்திருந்தது போதும். எழுந்திருங்கள்,” என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கறாராக விமர்சித்துள்ளார். 

மேலும், தன்னாரவத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், ஊரடங்கு உத்தரவை மீறி பொது வெளியில் பொருட்களை விநியோகம் செய்யக் கூடாது என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கைக்குத் தனது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார் கமல்ஹாசன். 

இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு, “கொரோனா தொற்று நோய் பரவுவதைத் தடுக்க, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், சில மாவட்டங்களில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், மக்களுக்கு உதவுவதாக கூறிக் கொண்டு, சமைத்த உணவையும், பொருட்களையும் விநியோகம் செய்வதாக ஊடகங்கள் மூலமாக தெரிய வருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்த்து, அதன் மூலம் சமூக இடைவெளியை பின்பற்றி தொற்று நோய் பரவுவதைத் தடுக்கவே, ஊரடங்கு போடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கொரோனா நோய் தொற்று நடவடிக்கைகளுக்கு உதவி செய்ய விரும்பும் நபர்களும், பல்வேறு அமைப்புகளும் வழங்க விரும்பும் நிதியை, முதலமைச்சர் நிவாரண நிதிக்கும், பொருட்களாக வழங்க விரும்பினால், மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும் வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த அறிவுரைகளை மீறி யாரேனும் செயல்பட்டால், அரசின் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கருதி, அவர்கள் மீது உரிய சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து கமல், “அண்டை மாநிலங்கள் சில, COVID19 உடன் போராட தனியார், இளைஞர்கள், ஓய்வு பெற்ற மருத்துவர் எனப்பலரின் உதவியை நாடிப் பெறுகின்றனர். என் அரசு ஏழைக்கு உதவுபவன் கையைத்தட்டிவிடுகிறது. 

மாண்புமிகு அமைச்சர்களே, இது கமிஷனுக்கும் ஒமிஷனுக்குமான நேரமில்லை. பயிற்சி பெற்ற ஆட்சியர்களை அவர்களின் பணியைச் செய்யவிடுங்கள்,” என்று விமர்சித்துள்ளார். 
 

.