மத்திய பிரதேசம் மாநில முதலமைச்சராக காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் வரும் டிச.17ல் பதவியேற்பதாக தெரிவித்துள்ளார்.
மூத்த காங்கிரஸ் நிர்வாகியான கமல்நாத், திக்விஜய் சிங், விவேக் தன்கா உள்ளிட்டவர்கள் இன்று ஆளுநர் ஆனந்திபென் படேலை சந்தித்து சட்டப்பேரவை கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டது குறித்து தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ஆளுநர் ஆனந்திபென், கமல்நாத்தை பதவியேற்குமாறு அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பானது கிட்டதட்ட 50 நிமிடங்கள் நடைபெற்றது.
கடந்த டிச.11ல் வெளியான தேர்தல் முடிவுகளில், ம.பி.யில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 114 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. எனினும் ஆட்சியமைக்க 116 தொகுதிகள் தேவையென்ற நிலையில் காங்கிரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை இருந்தது.
இதைத்தொடர்ந்து, காங்கிரசுக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தினால், எஸ்பி, - 1, பிஎஸ்பி - 2 சட்டமன்ற உறுப்பினர்கள், 4 சுயேட்சைகள் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, நேற்று இரவு மத்திய பிரதேசத்தில் போட்டியில் இருந்த கமல்நாத், ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தனித்தனியாக சந்தித்து பேசினர். இதைத்தொடர்ந்து, கமல்நாத் முதல்வராக பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.