சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனக்கூறிய கமல்ஹாசனுக்கு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் இதனைச் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பு நின்றுக் கொண்டு இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறினார்.
கமல்ஹாசனின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை கிளிப்பியுள்ள நிலையில், அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத உணர்வுகளை தூண்டி கலவரத்தை உண்டாக்க நினைக்கிறார். கமல்ஹாசன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து தீவிரவாதம் என தேர்தல் பிரசாரத்தில் பேசுவது விஷமத்தனம். ஆபத்தானது என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பதிவில், முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷச்செடி மக்கள் நீதி மய்யம். முஸ்லிம் ஓட்டுக்காக இந்துக்களை இழிவு படுத்தும் செயலைப் பாருங்கள். திருப்புவனம் இராமலிங்கத்தின் படுகொலையை கண்டிக்கதா கோழை என்று குறிப்பிட்டுள்ளார்.
எச்.ராஜாவின் இந்த ட்விட்டுக்கு பதில் தெரிவித்த தமிழிசை, தன் வாழ்க்கையில் எப்போதும் ஒழுக்கத்தையே கடைப்பிடித்த காந்தியின் கொள்ளுப்பேரன் தான் என்று கமல் சொல்லிக்கொள்ள எந்த தகுதியும் இல்லாதவர் ஏனெனில் இதுவரை அவர் வாழ்ந்த வாழ்க்கையில் எந்த ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்காதவர் என்பது நாடறிந்த உண்மை! ஊருக்கு உபதேசிக்க என்ன தகுதி? அரசியல்நடிப்பு??? என்றும் குறிப்பிட்டுள்ளார்.