This Article is From Dec 30, 2018

‘பெண்கள் மீது உங்களுக்கு அவ்வளவு அக்கறையா?’- பாஜக-வை துளைக்கும் கனிமொழி

‘முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்க சட்டம் இயற்றியுள்ள பாஜக அரசுக்கு பெண்கள் மீது அவ்வளவு அக்கறை உள்ளதா..?’

‘பெண்கள் மீது உங்களுக்கு அவ்வளவு அக்கறையா?’- பாஜக-வை துளைக்கும் கனிமொழி

முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும் வகையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இது கூடிய சீக்கிரம் சட்டமாக அமலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ‘முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்க சட்டம் இயற்றியுள்ள பாஜக அரசுக்கு பெண்கள் மீது அவ்வளவு அக்கறை உள்ளதா..?' என்று கேள்வி எழுப்பியுள்ளார் திமுக எம்.பி கனிமொழி.

இது குறித்து அவர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசுகையில், ‘முத்தலாக் தடை மசோதாவுக்கு எதிராகத் தான் திமுக இருக்கும். முத்தலாக் சொல்லி விவகாரத்து செய்வதென்பது சிவில் விஷயமாகும். அதை கிரிமினல் குற்றத்திற்குக் கீழ் கொண்டு வந்து சிறைத் தண்டனை விதிப்பதை திமுக ஒரு நாளும் ஏற்காது.

பாஜக-வுக்கு பெண்கள் மீது அவ்வளவு அக்கறை உள்ளதா. அப்படியென்றால், அவர்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு கொடுப்பதை சட்டமாக எடுத்து வரலாமே. இது பாஜக-வின் தேர்தல் அறிக்கையில் கூட இருக்கிறதே. அது குறித்து ஏன் எந்த வித நடவடிக்கையும் இல்லை. முத்தலாக் மசோதாவுக்கு எதிரான நிலைபாட்டில்தான் திமுக இருக்கிறது' என்று திட்டவட்டமாக கூறினார்.

மக்களவையில் முத்தலாக் தடை மசோதா வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 245 பேரும், எதிராக 11 பேரும் வாக்களித்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகை உள்ளிட்ட 5 விடுமுறை நாட்களுக்கு பின்னர் இரண்டு நாட்களுக்கு முன்னர் மக்களவை கூடியதும் முத்தலாக் மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சுமார் 4 மணி நேர விவாதத்திற்கு பிறகு மக்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும், எதிர்கட்சிகள் கொண்டு வந்த அனைத்து திருத்தங்களும் நிராகரிக்கப்பட்டன. முத்தலாக் மசோதா மீதான வாக்கெடுப்பின்போது காங்கிரஸ், அதிமுக, சமாஜ்வாடி கட்சிகளின் எம்.பி-க்கள் வெளிநடப்பு செய்தனர்.

.