உத்தரபிரதேசத்தின் கன்னூஜ் மாவட்டத்தில் 46 பயணிகளை ஏற்றிச் சென்ற சொகுசுப் பேருந்து ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில், பேருந்தும் லாரியும் தீப்பிடித்து ஏரிந்தது. இதில், பேருந்தில் இருந்த 21 பயணிகள் மருத்துவமனைக்கு மீட்டுச் செல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, ஜெயப்பூர் நோக்கிச் சென்ற படுக்கை வசதி கொண்ட தனியார் சொகுசுப் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குளானதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, விபத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு 30 - 40 நிமிடங்களில் அனுப்பி வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். எனினும், பேருந்துக்குள் இருப்பவர்கள் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு என்று காவல் ஆய்வாளர் மோஹித் அகர்வால் கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்த விபத்து சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, உத்தரபிரதேசத்தின் கன்னூஜ் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்து குறித்து அறிந்த மிகவும் வருத்தமடைந்தேன். இந்த விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கன்னூர் மாவட்ட நீதிபதி ரவீந்தர குமார் கூறும்போது, இந்த விபத்தில் சிலர் பேருந்தின் உள்ளே சிக்கிக்கொண்டனர். கன்னூஜ் மற்றும் மெயின்பூரில் இருந்து தீயணைப்பு இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டன என்று அவர் கூறினார்.
இந்த விபத்தை நேரில் பார்த்தவர் கூறும்போது, இந்த விபத்தில் பேருந்து பலத்த சேதமடைந்தது. இதனால், பேருந்தில் உள்ளே இருந்தவர்களால், வெளியே வர முடியவில்லை. 10 - 12 பேர் மட்டுமே பேருந்தில் இருந்து வெளியே தப்பினர். மற்றவர்கள் அனைவரும் பேருந்து உள்ளேயே சிக்கிக்கொண்டனர் என்று அவர் கூறினார்.
காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க வழிவகை செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.