ஹித்தேஷ் குமாரின் தந்தை லான்ஸ் நாய்க் பச்சன் சிங், கடந்த 1999 ஆம் ஆண்டு கார்கில் போரில் உயிரிழ்ந்தார். அப்போது ஹித்தேஷுக்கு வெறும் 6 வயது தான். தற்போது அவருக்கு 24 வயது. தன் தந்தை எந்தப் படைப்பரிவில் ராணுவ வீரராக இருந்தாரோ அதே பிரிவில் ராணுவ அதிகாரியாக சேர்ந்துள்ளார் ஹித்தேஷ்.
கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் கழித்து இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து ஹித்தேஷ், `என் தந்தை தான் சிறு வயது முதலே எனது உத்வேகம். அவரைப் போலவே ஆக வேண்டும் என்று கனவு கண்டேன். அதை இப்போது சாதித்து முடித்துள்ளேன்' என்றார் பெருமையாக.
இந்திய ராணுவ அகாடமியிலிருந்து கடந்த 9 ஆம் தேதி தேர்வு பெற்றார் ஹித்தேஷ். அவரது தந்தை பச்சன் சிங் ஏறக்குறைய 19 ஆண்டுகளுக்கு முன்னர் ஜூன் 13 ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை ஹித்தேஷ் தனது தந்தைக்கு அஞ்சலி செலுத்துவதற்காக உத்தரப் பிரதேச முசாஃபர்நகருக்கு ராணுவ சீருடையுடன் வந்தார். இந்த சம்பவம் அவர் தாய் கமலேஷ் பாலாவுக்கு மிகவும் பெருமை தருவதாக இருந்தது. `என் கணவர் கார்கில் போரில் இறந்த பிறகு கிட்டத்தட்ட ஓராண்டு காலம் என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதன் பிறகு தான் கொஞ்சம் பக்குவப்பட்டேன். என் இரண்டு மகன்களையும் எப்படி வளர்க்க வேண்டும் என்கின்ற முக்கிய முடிவையும் எடுத்தேன். என் இரண்டு மகன்களும் ராணுவ அதிகாரிகளாக வர வேண்டும் என்பதில் ஸ்திரமாக இருந்தேன். அதற்காக எதையும் செய்யத் தயாராக இருந்தேன்' என்றார் பெருமிதத்தோடு.
கமலேஷுக்கு ஹித்தேஷ், ஹேமந்த் என்ற இரட்டைக் குழந்தைகள். அதில் ஒருவர் தற்போது ராணுவ அதிகாரியாக பதவியேற்றுள்ளார். இன்னொருவர் ராணுவ அதிகாரி ஆக பயிற்சி எடுத்து வருகிறார். `எனக்கு மேலாண்மை துறையில் வேலைக்குப் போக நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், நான் கண்டிப்பாக ராணுவ அதிகாரியாக ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்' என்று கூறுகிறார் ஹித்தேஷ்.