This Article is From Jul 29, 2019

’எதேனும் தவறு செய்திருந்தால் மனித்துவிடுங்கள்’ சபாநாயகர் ரமேஷ்குமார் ராஜினாமா!

நான் எதேனும் தவறு செய்திருந்தால் மனித்துவிடுங்கள், அதனை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ள வேண்டாம், என ராஜினாமா செய்த பின்னர் சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்தார்.

’எதேனும் தவறு செய்திருந்தால் மனித்துவிடுங்கள்’ சபாநாயகர் ரமேஷ்குமார் ராஜினாமா!

காங்கிரஸ் - மஜத கூட்டணி 99 வாக்குகளையே பெற்றது.

Bengaluru:

கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது சபாநாயகராக இருந்த ரமேஷ் குமார் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

முன்னதாக, கர்நாடகத்தில் காங்கிரஸ்-மஜத கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் ராஜினாமா செய்ததால், குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி கடந்த 22-ந் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை இழந்து கவிழ்ந்தது.

இதைத்தொடர்ந்து ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யுமாறு கோரி காங்கிரஸ், மஜத கட்சிகள் சார்பில் சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் கடிதம் வழங்கப்பட்டது.

அதை பரிசீலித்த சபாநாயகர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் குமட்டள்ளி, சுயேச்சையாக போட்டியிட்டு காங்கிரசில் சேர்ந்த சங்கர் ஆகிய 3 எம்.எல்.ஏ.க்களை கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் கடந்த 25-ந் தேதி தகுதி நீக்கம் செய்தார்.

சபாநாயகரின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து, கர்நாடகத்தில் புதிய அரசு அமைக்க பாஜக முன்வந்தது. அக்கட்சியைச் சேர்ந்த எடியூரப்பா 26-ந் தேதி முதல்வராக பதவி ஏற்றார். இதைத்தொடர்ந்து, இன்று சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க உள்ளதாக எடியூரப்பா தெரிவித்தார். 

கர்நாடக சட்டசபை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 224. இவர்களில் 17 பேர் தகுதிநீக்கம்  செய்யப்பட்டுவிட்டதால், தற்போது சட்டசபை உறுப்பினர்களின் மொத்த பலம் 207.

இதில், பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு குறைந்தபட்சம் 104 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. பாஜகவுக்கு 105 உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் எளிதில் வெற்றி பெறும் நிலை ஏற்பட்டு உள்ளது.

அதன்படி, கர்நாடகாவில், இன்று காலை கூடிய சட்டப்பேரவையில், எடியூரப்பா, சித்தராமையா, குமாரசாமி உள்ளிட்டோர் பேசிய பின்னர் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபித்தார். 

இந்தச் சூழலில் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகரான ரமேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை சட்டசபை செயலாளரிடம் அவர் ஒப்படைத்தார்.

இதனிடையே ராஜினாமாவிற்கு முன் அவையில் பேசிய சபாநாயகர், "தனிப்பட்ட காரணங்களுக்காகவே சபாநாயகர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன்". கடந்த 14 மாதங்களாக அவையில் எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துகொள்கிறேன்.  

நான் எதேனும் தவறு செய்திருந்தால் மனித்துவிடுங்கள், அதனை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ள வேண்டாம், என ராஜினாமா செய்த பின்னர் சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்தார். 

சில நேரங்களில் நாம் சில கடுமையான முடிவை எடுக்க வேண்டியிருக்கும்.. நாம் சாதாரண மனிதர்கள். நாம் உட்கார்ந்திருக்கும் நாற்காலியை அவமதிக்காமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும். மக்கள் வந்து போவார்கள், முதலமைச்சர்கள் வந்து போவார்கள், ஆனால், நல்லவர்களாக இருக்க வேண்டும், நல்லது செய்ய வேண்டும்." என்று கே.ஆர்.ரமேஷ் கூறினார்.
 

.