Karnataka bypoll results: கர்நாடகாவில் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி நடந்த, 15 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன. மொத்தமுள்ள 15-ல் 12 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு, கவிழாது என்று தெரிகிறது. காங்கிரஸ் தரப்பு, “மக்கள் அதிருப்தி எம்எல்ஏக்களை ஏற்றுக் கொண்டுள்ளனர்,” என்று தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளது. கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி, கர்நாடகாவின் 15 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. முன்னதாக ஆட்சியிலிருந்த காங்கிரஸ் - மஜத அரசிலிருந்து, அதிருப்தி எம்எல்ஏ-க்கள் பாஜக பக்கம் சாய்ந்தனர். அதைத் தொடர்ந்து பாஜக ஆட்சியைப் பிடித்தது. அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகள் காலி என அறிவிக்கப்பட்டு, இடைத் தேர்தல் நடந்தது.
இது குறித்த 10 முக்கிய தகவல்கள்:
1.இந்த வெற்றியின் மூலம், கட்சித் தாவியவர்களை மக்கள் ஏற்றுக் கொண்டனர் என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். இது குறித்து கவலையடைய தேவையில்ல என்று கர்நாடக காங்கிரஸின் மூத்த நிர்வாகி டி.கே.சிவக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
2.பாஜக கிட்டத்தட்ட 12 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால், கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவும் அவரது மகன் பி.ஒய்.விஜயேந்திராவும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
3.மொத்தமாக தேர்தல் நடந்த 15 தொகுதிகளில் 12 காங்கிரஸ் வசமும் 3 மதச்சாற்பற்ற ஜனதா தளம் வசமும் இருந்தன.
4.இந்த இடைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளாக இருந்த காங்கிரஸும் மஜதவும் தனித் தனியே போட்டியிட்டன.
5.மீண்டும் கூட்டணி வைத்துப் போட்டியிட காங்கிரஸ் தயாராக இருந்தது. ஆனால், மீண்டும் ‘கிங்-மேக்கராக' வலம் வர வேண்டும் என்ற கனவில் மஜத அதைத் தட்டிக் கழித்தது.
6.முதல்வர் எடியூரப்பா, “நாங்கள், எங்களின் ஆட்சிக் காலத்தை நிறைவு செய்வோம். மக்களுக்கும் அந்த எதிர்பார்ப்பு உள்ளது,” என்றுள்ளார். அதிருப்தி எம்எல்ஏக்களால் பாஜகவுக்கு மிகப் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. ஆனால், அந்த கணிப்புப் பொய்த்துள்ளது.
7.முன்னதாக காங்கிரஸ் - மஜதவிலிருந்து பாஜக பக்கம் தாவிய எம்எல்ஏக்களை சட்டசபை சபாநாயகராக இருந்த கே.ஆர்.ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்து, 2023 ஆம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிட தடை செய்திருந்தார்.
8.இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்றும், தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று உத்தரவிட்டது செல்லாது என்றும் தீர்ப்பளித்தது நீதிமன்றம்.
9.பாஜக, 13 தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களையே மீண்டும் களத்தில் நிறுத்தியுள்ளது. அவர்களை முதல்வர் எடியூரப்பா, “வருங்கால அமைச்சர்கள்,” என்றுள்ளார்.
10.பாஜக தரப்பில், அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சீட் கொடுத்தது, அக்கட்சிக்குள்ளேயே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பலரும் மற்ற கட்சிகளில் இணைந்துள்ளனர். சிலர் சுயேட்சைகளாக தேர்தலில் களம் கண்டுள்ளனர். தற்போது அனைவரையும் சமாதானப்படுத்தி ஆட்சி நடத்துவது எடியூரப்பாவுக்கு பெரிய சவாலாக இருக்கும்.