கடந்த புதன்கிழமையன்று நெஞ்சுவலி காரணமாக சித்தராமையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Bengaluru: பெங்களூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையாவை கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா நேரில் சென்று உடல் நலம் குறித்து விசாரித்தார்.
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுடன், அம்மாநில அமைச்சர்கள் கே.எஸ்.ஈஸ்வரப்பா மற்றும் பசவராஜ் பொம்மை ஆகியோர் மருத்துவமனையில் சித்தராமையாவை சந்தித்து நலம் விசாரித்தனர்.
கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையாவுக்கு கடந்த புதன்கிழமையன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து பெங்களூரு பசவேஸ்வரா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல் பரிசோதனை நடைபெற்றது.
பின்னர் முதலுதவி அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்ட சித்தராமையாவுக்கு அடுத்தடுத்து இதயத்தில் வலி ஏற்பட்டது. இதையடுத்து மல்லேஸ்வரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது, அவரது இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் சீராக இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தார்கள். இதைத்தொடர்ந்து, மருத்துவர்களின் பரிந்துரையின்படி, அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் உடல்நலம் தேறி வருவதாக அவரது மகன் யாதிந்திர சித்தராமையா கூறினார்.