This Article is From Jul 15, 2019

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நாள் குறிக்கப்பட்டது: காங் - மஜத கூட்டணி அரசுக்கு செக்!

அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா ஏற்கப்படும் பட்சத்தில் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசுக்கு, சட்டமன்றத்தில் பெரும்பான்மை குறையும்.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நாள் குறிக்கப்பட்டது: காங் - மஜத கூட்டணி அரசுக்கு செக்!

காங்கிரஸ் தரப்போ, அதிருப்தி எம்.எல்.ஏ-க்களிடம் சமாதானம் பேச கடுமையாக முயன்று வருகிறது. ஆனால், இதுவரை அதில் எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. 

ஹைலைட்ஸ்

  • வரும் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்
  • கர்நாடக கூட்டணி அரசிலிருந்து 18 எம்எல்ஏ-க்கள் விலகியுள்ளனர்
  • 18 எம்எல்ஏ-க்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை சமர்பித்துள்ளனர்
Bengaluru:

கர்நாடகத்தில் ஆட்சிபுரிந்து வரும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி அரசு, வரும் வியாழக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க உள்ளது. சமீபத்தில் கூட்டணி அரசின் 18 எம்.எல்.ஏ-க்கள் பாஜக முகாம் நோக்கி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த 18 எம்.எல்.ஏ-க்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை, சபாநாயகரிடம் கொடுத்துள்ளனர். அவர்களின் ராஜினாமா கடிதத்தை மாநில சட்டமன்ற சபாநாயகர் ரமேஷ் குமார் ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள், சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றம், ராஜினாமா குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று கூறி இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா ஏற்கப்படும் பட்சத்தில் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசுக்கு, சட்டமன்றத்தில் பெரும்பான்மை குறையும். எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக-வுக்குப் பெரும்பான்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் தரப்போ, அதிருப்தி எம்.எல்.ஏ-க்களிடம் சமாதானம் பேச கடுமையாக முயன்று வருகிறது. ஆனால், இதுவரை அதில் எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. 

காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசுக்கு ஆதரவாக 118 எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர். இதில் 18 எம்.எல்.ஏ-க்கள் விலகியுள்ளதால், கூட்டணி அரசின் பலம் 100 ஆகக் குறையும். அதே நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா ஏற்கப்பட்டால், பெரும்பான்மையை நிரூபிக்க 105 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருந்தால் போதும் என்ற நிலை உருவாகும். சட்டமன்றத்தில் பாஜக-வுக்கு 105 பேர் ஆதரவு இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2 சுயேட்சை எம்.எல்.ஏ-க்களின் ஆதரவும் உள்ளது. 

இப்படிப்பட்ட அரசியல் குழப்பமான சூழ்நிலையில்தான் எதிர்க்கட்சித் தலைவரான பாஜக-வின் எடியூரப்பா, சட்டமன்றத்தில் ஆளுங்கூட்டணி அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கோரினார். 

இதற்கு முதல்வர் குமாரசாமி, “பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார். எனது அரசு ஸ்திரமாகத்தான் உள்ளது. ஆனால், அதற்கு காலக்கெடு வேண்டும்” என்று கூறினார். 

இன்று கூடிய சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது, பாஜக, நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி நோட்டீஸ் சமர்பித்தது. இதைத் தொடர்ந்து மாநில சட்டமன்ற அஜெண்டாவைத் தீர்மானிக்கும் குழு ஆலோசனை நடத்தியது. அந்த ஆலோசனைக்குப் பிறகு காங்கிரஸின் சித்தராமையா, ‘வரும் 18 ஆம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்' என்று கூறினார். 

.