This Article is From Jul 15, 2019

ரெசார்ட்டிலிருந்து சட்டசபைக்கு வரும் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள்: காங் - மஜத அரசு தப்புமா..?

இப்படிப்பட்ட அரசியல் குழப்பமான சூழ்நிலையில்தான் எதிர்க்கட்சித் தலைவரான பாஜக-வின் எடியூரப்பா, சட்டமன்றத்தில் ஆளுங்கூட்டணி அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். 

ரெசார்ட்டிலிருந்து சட்டசபைக்கு வரும் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள்: காங் - மஜத அரசு தப்புமா..?

முதல்வர் குமாரசாமி, “பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார். எனது அரசு ஸ்திரமாகத்தான் உள்ளது. ஆனால், அதற்கு காலக்கெடு வேண்டும்” என்று கூறியுள்ளார். 

Bengaluru:

கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசிலிருந்து இதுவரை 18 எம்.எல்.ஏ-க்கள் பாஜக முகாம் நோக்கி சென்றுள்ளனர். அவர்களின் ராஜினாமா கடிதத்தை மாநில சட்டமன்ற சபாநாயகர் ரமேஷ் குமார் ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள், சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றம், ராஜினாமா குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று கூறி இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மும்பையிலிருந்த சொகுசு ரெசார்ட்டில் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள், கடந்து ஒரு வாரத்துக்கு மேலாக தங்கியிருந்தனர். இன்று சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் என்று கூறப்படும் நிலைநில், அவர்கள் மாநிலத்துக்குத் திரும்ப உள்ளனர். 

அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா ஏற்கப்படும் பட்சத்தில் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசுக்கு, சட்டமன்றத்தில் பெரும்பான்மை குறையும். எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக-வுக்குப் பெரும்பான்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் தரப்போ, அதிருப்தி எம்.எல்.ஏ-க்களிடம் சமாதானம் பேச கடுமையாக முயன்று வருகிறது. ஆனால், இதுவரை அதில் எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. 

காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசுக்கு ஆதரவாக 118 எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர். இதில் 18 எம்.எல்.ஏ-க்கள் விலகியுள்ளதால், கூட்டணி அரசின் பலம் 100 ஆகக் குறையும். அதே நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா ஏற்கப்பட்டால், பெரும்பான்மையை நிரூபிக்க 105 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருந்தால் போதும் என்ற நிலை உருவாகும். சட்டமன்றத்தில் பாஜக-வுக்கு 105 பேர் ஆதரவு இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2 சுயேட்சை எம்.எல்.ஏ-க்களின் ஆதரவும் உள்ளது. 

இப்படிப்பட்ட அரசியல் குழப்பமான சூழ்நிலையில்தான் எதிர்க்கட்சித் தலைவரான பாஜக-வின் எடியூரப்பா, சட்டமன்றத்தில் ஆளுங்கூட்டணி அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். 

இதற்கு முதல்வர் குமாரசாமி, “பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார். எனது அரசு ஸ்திரமாகத்தான் உள்ளது. ஆனால், அதற்கு காலக்கெடு வேண்டும்” என்று கூறியுள்ளார். 

.