ஏர்செல் மேக்சிஸ் வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது நீதிமன்றம், ‘எந்தெத்த தேதிகளில் கார்த்தி சிதம்பரம் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும்' என்று மத்திய அமலாக்கத் துறையிடம் கேட்டது. அதற்கு அமலாக்கத் துறை, ‘கார்த்தி சிதம்பரம் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு சரிவர ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கிறார். அவரின் இந்த போக்கினால் வழக்கு விசாரணை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது' என்று அடுக்கடுக்காக குற்றம் சாட்டியது. இது உச்ச நீதிமன்றத்தை சினம் கொள்ளச் செய்தது.
மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில், ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தார். அப்போது 2006-ம் ஆண்டு மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான குளோபல் கம்யூனிகேசன் சர்வீசஸ் ஹோல்டிங்க்ஸ் லிமிடெட், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3 ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்தது.
இந்த முதலீட்டுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர்கள் குழுவின் அனுமதியை பெறாமல், விதிமுறைகளை மீறி வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் மூலம் ப.சிதம்பரம் அனுமதி அளித்து விட்டார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த அனுமதியைப் பெறுவதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அவர்கள் மீது சி.பி.ஐ மற்றும் மத்திய அமலாக்கத் துறை தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் ஏர்செல் மேக்சிஸ் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கார்த்தி சிதம்பரம் தரப்பு, ‘வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் கார்த்தி சிதம்பரம், இங்கிலாந்து, ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளில் டென்னிஸ் விளையாட உள்ளார். எனவே, அவருக்கு பயணம் செய்ய அனுமதி கொடுக்க வேண்டும்' என்று வாதம் வைத்தது.
இதற்கு அமலாக்கத் துறை தரப்பு, ‘நீதிமன்றம் கார்த்தி சிதம்பரத்துக்கு அளித்த உரிமைகளை, அவர் தவறாக பயன்படுத்தி வருகிறார். கடந்த 6 மாதங்களில் அவர் 51 நாட்கள் வெளிநாடுகளில் இருந்துள்ளார். அவர் விசாரணையை திசைத் திருப்பப் பார்க்கிறார்' என்று குற்றம் சாட்டியது.
அனைத்து வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், ‘விசாரணையிலிருந்து தப்பிக்கும்படி கார்த்தி சிதம்பரம் நடந்து கொண்டால், அவருக்கு டென்னிஸ் விளையாடவெல்லாம் அனுமதி தரப்படாது. மீண்டும் இந்த வழக்கு வரும் புதன் கிழமை விசாரணைக்கு வரும். அதற்குள் கார்த்தி, எந்தெந்த தேதிகளில் ஆஜராக வேண்டும் என்பதை அமலாக்கத் துறை சொல்ல வேண்டும்' என்று உத்தரவிட்டு வழக்கைத் தள்ளி வைத்தது.