This Article is From Dec 04, 2019

ஒரே வார்த்தையில் தந்தையின் ஜாமீனுக்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கார்த்தி சிதம்பரம்!

இறுதியாக அமலாக்கத் துறையின் வாதங்களை ஏற்காத உச்ச நீதிமன்றம், சிதம்பரத்துக்கு ஜாமீன் கொடுத்து உத்தரவிட்டது.

ஒரே வார்த்தையில் தந்தையின் ஜாமீனுக்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கார்த்தி சிதம்பரம்!

சிதம்பரம், ஊடகங்களிடம் பேசக் கூடாது என்றும், அறிக்கைகள் வெளியிடக் கூடாது என்றும், சாட்சியங்களைத் தொடர்பு கொள்ள முயலக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.

New Delhi:

ஐ.என்.எக்ஸ் மீடியா பணமோசடி வழக்கில் (INX Media Case) கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்குப் (P Chidambaram) பிணை கொடுத்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். இது குறித்து தனது மகிழ்ச்சியை ஒரு வார்த்தையில் வெளிப்படுத்தியுள்ளார் சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம். 

கார்த்தி சிதம்பரம், “Phew, ஒருவழியாக 106 நாட்களுக்குப் பின்னர் பிணை கிடைத்துள்ளது,” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

சிதம்பரம், 105 நாட்களாக டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வெளியே வருகிறார். பிணை கொடுத்த உச்ச நீதிமன்றம், சிதம்பரம், நாட்டை விட்டு வேறு எங்கும் செல்லக் கூடாது என்றும், எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. கூடுதலாக, வழக்குத் தொடர்பாக சிதம்பரம், ஊடகங்களிடம் பேசக் கூடாது என்றும், அறிக்கைகள் வெளியிடக் கூடாது என்றும், சாட்சியங்களைத் தொடர்பு கொள்ள முயலக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.

சிதம்பரத்தின் பிணை மனுவை விசாரித்த நீதிமன்றம், கடந்த நவம்பர் 28-ல், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது. முன்னதாக டெல்லி உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை தொடர்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், சிதம்பரத்துக்குப் பிணை கொடுக்க மறுத்துவிட்டது. 

பிணை விசாரணையின்போது அமலாக்கத் துறை, “கஸ்டடியில் இருக்கும் போதும் சிதம்பரத்தால் வழக்கின் முக்கிய சாட்சியங்களிடம் தாக்கம் ஏற்படுத்த முடியும்,” என்று குற்றம் சாட்டியது. அதற்குச் சிதம்பரம், “ஆதராமற்ற வாதங்கள் மூலம் சமூகத்தில் எனக்கிருக்கும் நன்மதிப்பையும் பொது வாழ்க்கையையும் சிதைத்துவிட முடியாது,” என்றார். 

இறுதியாக அமலாக்கத் துறையின் வாதங்களை ஏற்காத உச்ச நீதிமன்றம், சிதம்பரத்துக்கு ஜாமீன் கொடுத்து உத்தரவிட்டது.

கடந்த 2000 ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. அதனடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் கடந்த 2018-இல் வழக்குப்பதிவு செய்தது. 

.