This Article is From Oct 12, 2018

மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்பு ஏன்? விளக்கும் கருணாஸ்!

கருணாஸ் இன்று சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்தார்.

மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்பு ஏன்? விளக்கும் கருணாஸ்!

அதிமுக சார்பில், தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர் எம்.எல்.ஏ கருணாஸ், அண்மையில் இவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் காவல்துறையினர் குறித்து தனது சர்ச்சை பேச்சுக்காக கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கருணாஸ் இன்று சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்தார்.

இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

கடந்த மாதம் என்னை போலீசார் கைது செய்தபோது, எனக்கு ஆதரவாக பேசியவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ஆகவே, அவரை மரியாதை நிமித்தமான சந்திப்பதற்காகவே வந்தேன் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ஒரு சில ஊடகத்தினர் மற்றும் பொதுமக்கள் என்னை திமுக மற்றும் அமமுக கட்சியின் தலைவர்கள் இயக்குவதாக நினைக்கிறார்கள். ஆனால், என்னை பொருத்தவரை, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மற்றும் எனது சமூகத்தினர் மட்டுமே என்ன வழிநடத்துகிறார்கள். விடுதலை வீரரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தமிழக மக்களால் நன்கு அறியப்பட்டவர். தென் தமிழக மக்களால் பெரிதும் மதிக்கப்படுபவர் என்றார்.

என் மனதில் பட்ட கருத்துகளை மட்டுமே நான் பேசிவந்தேன். அதற்காகப் பழைய வழக்குகளில் போலீஸார் என்னைக் கைதுசெய்ய முயற்சி செய்கிறார்கள். சபாநாயகர் என்பவர் நடுநிலையாக இருக்க வேண்டும், ஆனால், அவர் ஒருதலைபட்சமாகச் செயல்படுகிறார் என்றார்.

நகைச்சுவை நடிகரான கருணாஸ், முக்குலத்தோர் புலிப்படை என்ற கட்சியின் தலைவராக உள்ளார். இவர் 2016ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தொகுதியில் அதிமுக சார்பில் நின்று வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.