ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை ஏற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi) கருத்து தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
காஷ்மீர் விவகாரம் குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது-
ஜம்மு காஷ்மீர் பிரச்னையில் மத்திய அரசுடைய பல நிலைப்பாடுகளில் எனக்கு கருத்து வேறுபாடு உண்டு. ஆனால் ஒன்றை நான் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். காஷ்மீர் பிரச்னை என்பது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இதில் பாகிஸ்தானோ மற்ற எந்த வெளிநாடுகளோ தலையிடுவதற்கு இடம் இல்லை.
ஜம்மு காஷ்மீரில் வன்முறை நடக்கிறது. இதற்கு பாகிஸ்தான் தான் முக்கிய காரணம். அந்த நாட்டின் தூண்டுதல் காரணமாகத்தான் ஜம்மு காஷ்மீரில் வன்முறை நடக்கிறது. உலகம் முழுக்க தீவிரவாதிகளுக்கு முக்கிய ஆதரவாளராக இருப்பது பாகிஸ்தான்.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசு மேற்கொண்ட சிறப்பு அந்தஸ்து நீக்கம், படைகள் குவிப்பு, அரசியல் தலைவர்கள் கைது நடவடிக்கை உள்ளிட்ட பல விஷயங்களை காங்கிரஸ் கட்சி எதிர்த்து வந்தது. ஆனால், பாகிஸ்தான் எதிர்ப்பு விவகாரத்தில் காங்கிரசும், பாஜகவும் ஒரே நிலைப்பாட்டை எடுத்துள்ளன.