புல்வாமா தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவகாசம் தாருங்கள் என்று பிரதமர் மோடியிடம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காஷ்மீர் புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் உறவில் கடும் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. 40 வீர்ர்கள் உயிரிழந்த புல்வாமா தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றிருந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வந்தநிலையில், பாகிஸ்தான் அதனை பொருட்படுத்தவில்லை.
இதன்பின்னர் அந்நாட்டின் மீதான இறக்குமதி வரி 200 சதவீதமாக உயர்த்தப்பட்டது. சர்வதேச நாடுகள் பாகிஸ்தான் மீது அழுத்தம் கொடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு செய்தது. இந்த நிலையில் ராஜஸ்தான் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பார்த்து அவர் ஒரு பதான் இனத்தை சேர்ந்தவராக இருந்தால், அந்த இனத்தின் பெயரை காப்பாற்றுங்கள் என்று பேசினார்.
பதான் இனம் ஈரானை பூர்வீகமாக கொண்டது. அவர்கள் நீதி நேர்மைக்கு பெயர் பெற்றவர்கள் என்று பரவலாக பேசப்படுகிறது. இந்த நிலையில், மோடியின் பேச்சுக்கு இம்ரான் கான் பதிலளித்திருக்கிறார்.
இதுகுறித்து அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘' இம்ரான் கான் சொன்ன வாக்கை காப்பாற்றுவார். புல்வாமா தாக்குதலில் தொடர்புடையவர்கள் பாகிஸ்தானில் இருக்கிறார்கள்; பாகிஸ்தானுக்கும் தாக்குதலில் தொடர்பு உண்டு என்பதற்கான ஆதாரங்களை அளித்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு இந்தியா கால அவகாசம் தர வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரராக இருந்து பாகிஸ்தானின் பிரதமராக உயர்ந்தவர் இம்ரான் கான். அவர் பிரதமராக பொறுப்பேற்றபோது, பிரதமர் மோடி போனில் தொடர்பு கொண்டு இம்ரான் கானுக்கு வாழ்த்து தெரிவித்தார். இருவரும் ஒன்றிணைந்து வறுமை, கல்வியின்மையை ஒழிப்போம் என்று மோடி கூறியிருந்த்து கவனிக்கத்தக்கது.
மேலும் படிக்க - "ஒன்றை வீசினால் பதிலுக்கு 20 அணுகுண்டுகளை வீசி பாகிஸ்தானை இந்தியா அழித்து விடும்"