Thiruvananthapuram: கேரள மாநிலம் வயநாட்டில் நிவாரணப் பொருட்களைக் கடத்த முயன்ற இரு கேரள அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். உயரதிகாரி ஒருவர் அளித்த புகாரின் பேரில் தாமஸ், தினேஷ் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
“குற்றம்சாட்டப்பட்டுள்ள தாமஸ், தினேஷ் ஆகிய இருவரும் பனமரம் நிவாரண முகாமில் இருந்து பொருட்களை ஒரு வண்டியில் ஏற்றும்போது முகாமில் இருந்த மக்கள் அவர்களைத் தடுத்துக் கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு, வேறொரு கிராமத்தில் உள்ள முகாமுக்குப் பொருட்களை ஏற்றிச் செல்வதாக இருவரும் கூறியுள்ளனர். இதில் திருப்தியடையாத மக்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். அவர்கள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் இருவரும் பொய் கூறியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்” என்று இச்சம்பவம் குறித்து புகார் அளித்த அதிகாரி கூறுகிறார்.
இதனிடையே செங்கன்னூரிலும் இதேபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் தற்காலிக அரசு ஊழியர் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளார்.
வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டதை அடுத்து நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கேரளாவுக்கு நிவாரணப் பொருட்கள் வந்தவண்ணம் உள்ளன.