கேரளாவில் ஒருவருக்கு தனது 65 வயது தந்தையை தோளில் சுமந்து படி 1 கி.மீ நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஹைலைட்ஸ்
- 1கி.மீக்கு தந்தையை தோளில் சுமந்து சென்ற அவலம்
- குடும்பத்தினர் இறங்கி செல்லும்படியும், கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
- கேரள மாநில மனித உரிமைகள் ஆணையம், வழக்குப்பதிவு
Kollam, Kerala: கேரளாவில் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆட்டோ தடுத்து நிறுத்தப்பட்டதால், 65 வயது முதியவரை அவரது மகன், 1.கி.மீ தூரத்திற்கு தோளில் தூக்கியபடி நடந்த செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கொல்லம் பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர் உடல்நலக்குறைவு காரணமாக புனலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, அவரது மகன் அவரை ஆட்டோவில் வைத்து வீட்டிற்கு அழைத்துச் செல்லும் வழியில், போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வருவது குறித்த ஆவணங்களை காட்டியும் அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் ஆட்டோவில் இருந்து இறங்கி செல்லும்படியும், போலீசாரால் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுக்கு வேறு எந்த மாற்று ஏற்பாடு செய்யாததால், 1 கி.மீ தொலைவில் உள்ள புனலூருக்கு அந்த நபர் தனது தந்தையை தோளில் சுமந்து செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தகவல் அறிந்த கேரள மாநில மனித உரிமைகள் ஆணையம், இந்த சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.
நேற்றைய தினம் வரை கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 388 ஆக உள்ளது. இதில், 218 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
முன்னதாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மே.3ம் தேதி வரை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார். மேலும், அடுத்த வாரம் முதல் நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.