நிபா வைரஸ் அறிகுறியுடன் கேரள இளைஞர் ஒருவர் எர்ணாக்குளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிர்க்கொல்லி நோயான நிபா வைரஸ் தாக்குதல் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி கடந்த ஆண்டு மொத்தம் 18 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருந்தது. அவர்களில் 17 பேர் உயிரிழந்திருக்கின்றனர். நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறியுடன் 23 வயது இளைஞர் ஒருவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அவரது சோதனை மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் ஆய்வின் முடிவில் அவருக்கு நிபா வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.
இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா கூறுகையில், 'நிபா வைரஸ் பாதிப்புள்ளவர்களை நாங்கள் கண்காணித்து வருகிறோம். அவர்களுக்கு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை அளித்துள்ளோம். முதலுதவி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் யாரும் பயப்பட வேண்டாம்.' என்றார்.