This Article is From Jan 15, 2019

கொடநாடு விவகாரம்: முதல்வர் பதவி விலக வேண்டும்: கமல்ஹாசன் வலியுறுத்தல்

கொடநாடு விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் அவர் பதவி விலக வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

கொடநாடு விவகாரம்: முதல்வர் பதவி விலக வேண்டும்: கமல்ஹாசன் வலியுறுத்தல்

ஹைலைட்ஸ்

  • கொடநாடு விவகாரம் குறித்து வெளியாகியுள்ள ஆவணப்படம் ஒரு மர்ம கதையாக உள்ளது.
  • அவர்களுக்கு உடனே தண்டனை வழங்க வேண்டும் என சொல்லவில்லை.
  • மற்ற முதலவர்கள் மீது கொலை குற்றசாட்டு இல்லை என சொல்ல முடியாது.

கொடநாடு விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் அவர் பதவி விலக வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை மற்றும் பணியாளர்கள் மரணம் தொடர்பாக தெஹல்காவின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஒரு வீடியோவை அண்மையில் வெளியிட்டார். அதில், வீடியோவில் மேத்யூஸ், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

இதையடுத்து, கொடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை எஸ்.பி செந்தில் குமார் தலைமையில் டெல்லி சென்று கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சயன் மற்றும் மனோஜ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் நீண்ட நேர விசாரணைக்கு உட்படுத்தி, பின்னர் சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சரிதா முன் ஆஜர்படுத்தினர். அப்போது போலீசாரிடம் நீதிபதி, என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினர்.

அதற்கு காவல்துறையினர் அளித்த பதிலும், உரிய ஆதாரங்களும் போதுமானதாக இல்லை எனவும் சயான், மனோஜ் பேட்டியால் போலீஸ் கூறுவதுபோல் எங்கு கலவரம் ஏற்பட்டது? அரசுக்கு என்ன பிரச்னை ஏற்பட்டது? என சரமாரி கேள்வி எழுப்பினார். மேலும் சயான், மனோஜை நீதிமன்றக் காவலில் சிறைக்கு அனுப்ப நீதிபதி மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் ஜாமினில் வெளியே வந்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் கூறியதாவது, கட்சியின் புதிய அலுவலகம் திறக்கவும், பொங்கலை கிராமப்புற சூழலில் மக்களுடன் மக்களாக கொண்டாடவும் கோவை மாவட்டம் வந்துள்ளேன். கொடநாடு விவகாரம் தொடர்பாக கேள்விக்கு முதல்வர் பதவி விலக வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கைகள் வருவது தொடர்பான கேள்விக்கு, நானும் இரண்டரை வருடமாக அதைதான் வலியுறுத்தி வருவதாகவும், எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமில்லை என்றார்.

தற்போது வெளியாகியுள்ள ஆவணப்படம் ஒரு மர்ம கதையின் அடுத்த அத்தியாயமாக இருக்கிறது. இந்தியாவில் மற்ற முதலவர்கள் மீது இது போன்ற கொலை குற்றசாட்டு இல்லை என சொல்ல முடியாது. ஆனால் இங்கிருப்பது நமக்கு பெருமையான விஷயமல்ல.

அவர்களுக்கு உடனே தண்டணை வழங்க வேண்டும் என சொல்லவில்லை. அவர்கள் மீது உள்ள சந்தேகத்திற்கு ஆதாரமாக இருப்பதில் ஒன்றாக இருக்க கூடும் என நினைப்பதில் தவறில்லை என்று அவர் கூறியுள்ளார்.

.