சரியாக ஓராண்டுக்கு முன்னர் இதே தேதியில் மகாராஷ்டிராவின் கொரேகன் பிமாவில் தலித்துகளுக்கும் வலதுசாரி அமைப்பினருக்கும் இடையில் கலவரம் வெடித்தது. இன்றும் கொரேகனில் பல்லாயிரக்கணக்கான தலித்துகள் கூட உள்ளனர். சென்ற ஆண்டுபோல இந்த ஆண்டு எந்தவித கலவரங்களும் மூண்டுவிடக் கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5,000 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 1,200 ஊர் காவல் படை மற்றும் மாநில ரிசர்வ் போலீஸ் படையைம் கொரேகனில் குவிக்கப்பட்டுள்ளது.
201 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டிஷ் ஆட்சி நடந்தபோது, அவர்களுடன் கை கோர்த்து தலித்துகள், கொரேகனில் உயர் சாதி ஆட்சியளர்களை மண்ணைக் கவ்வ வைத்தனர். இந்த வெற்றியின் 200 ஆம் ஆண்டை சென்ற முறை கொண்டாடியபோதுதான் வலதுசாரி அமைப்புகளுக்கும் தலித்துகளுக்கும் மோதல் உருவானது.
முக்கிய 10 தகவல்கள்:
1. தலித்துகளின் பிம் ராணுவத் தலைவர் சந்திரசேகர் அசாதுக்கு, கொரேகனில் உரையாற்ற பாம்பே உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது.
2. அதே நேரத்தில் கொரேகன் பிமா பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் நினைவிடத்தைத் அசாத் சென்று பார்வையிடுவதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. தற்போது நிலவி வரும் சூழல் குறித்து அசாத், ‘அறிவிக்கப்படாத அவசர நிலை பிரடனம் செய்யப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.
3. பல லட்சம் பேர் இன்று போர் நினைவிடத்துக்கு வர வாய்ப்பிருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ், நினைவிடத்துக்கு அருகே கேமராக்களை பொருத்தியுள்ளன. சில ட்ரோன் கேமராக்கள் மூலமும் கூட்டத்தைக் கண்காணிக்க உள்ளது போலீஸ்.
5. அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கர், இன்று கொரேகனில் இருக்கும் நினைவிடத்துக்கு வருவார் என்று கூறப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு தலித்துகள் மீது நடந்த தாக்குதலை அடுத்து, மாநிலம் தழுவிய பந்துக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார்.
6. இந்த ஆண்டு எந்தவிதக் கலவரமும் வந்துவிடக் கூடாது என்பதற்காக, சுமார் 1200 பேருக்கு நினைவிடத்துக்கு வர தடை விதித்துள்ளது போலீஸ் தரப்பு.
7. கபிர் கலா மன்ச் அமைப்பினர் மற்றும் மிலிந் எக்போட்டே போன்ற முக்கியப் புள்ளிகளுக்கும் இன்று நினைவிடத்துக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
8. போலீஸ் தரப்பு, மாவோயிஸ்ட்டுகள் தூண்டுதலின் பேரில்தான் 2017, டிசம்பர் 31 ஆம் தேதி கலவரம் நடந்தது என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
9. 'சென்ற ஆண்டு நடந்த கலவரத்துக்குத் தொடர்புடைய பலர் மீது மிகக் கடுமையான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் இந்த முறை நிகழ்ச்சிக்கு வரக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது' என்று புனே போலீஸ் கூறியுள்ளது.
10. சென்ற ஆண்டு நடந்த வன்முறையை அடுத்து வலதுசாரி அமைப்புகள், ‘மராத்தியர்களுக்கு எதிரான பிரிட்டிஷ் வெற்றியை ஏன் கொண்டாட வேண்டும். குஜராத்தைச் சேர்ந்த தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி தான் கொரேகனில் பதற்றமான சூழல் நிலவுவதற்குக் காரணம்' என்று குற்றம் சாட்டின.