This Article is From Nov 06, 2018

‘ராஜபக்சேவுக்கு 113 எம்.பி-க்களின் ஆதரவு உள்ளது!’- அதிபர் சிறிசேனா

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, ‘எனக்கு நாடாளுமன்றத்தில் 113 எம்.பி-க்களின் ஆதரவு உள்ளது

‘ராஜபக்சேவுக்கு 113 எம்.பி-க்களின் ஆதரவு உள்ளது!’- அதிபர் சிறிசேனா

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, ‘எனக்கு நாடாளுமன்றத்தில் 113 எம்.பி-க்களின் ஆதரவு உள்ளது. அதனால் ராஜபக்சேவிற்கு பெரும்பான்மை கிடைக்கும்' என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியலில் அதிரடி மாற்றமாக பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை, அதிபர் சிறிசேனா கடந்த மாதம் நீக்கினார். பின்னர் முன்னாள் அதிபராக இருந்த ராஜபக்சேவை மீண்டும் பிரதமர் பொறுப்பில் அமர்த்தினார்.

பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியிருந்த நிலையில், நாடாளுமன்றத்தையும் அதிபர் சிறிசேனா கலைத்ததால் இலங்கையில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டிருந்தது. சிறிசேனாவின் இந்த அதிர்ச்சியளிக்கும் முடிவுகளுக்கு பிரதமராக இருந்த ரணில் விக்ரம சிங்கே மற்றும் சபாநாயகர் கரு ஜெயசூர்யா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இத்தகைய சூழலில் முடிவை மாற்றிக் கொண்ட சிறிசேனா வரும் 14 ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும் என அறிவித்தார். அன்றைய தினம் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் பிரதமர் ராஜபக்சே இருக்கிறார். அதே நேரத்தில் அதிக உறுப்பினர்களின் ஆதரவு ரணிலுக்குதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், அதிபர் சிறிசேனாவுக்கு சபாநாயகர் மிக முக்கியமான கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில், ‘மெஜாரிட்டியை நிரூபிக்காத வரையில் ராஜபக்சேவை பிரதமராக ஏற்க முடியாது. அதுவரை ரணில்தான் பிரதமராக நீடிப்பார்' என்று குறிப்பிட்டுள்ளார் ஜெயசூர்யா.

இதனால் இலங்கை அரசியலில் மீண்டும் பரபரப்பும், குழப்பமும் ஏற்பட்டுள்ளது. இதற்கு வரும் 14-ம்தேதி முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அதிபர் சிறிசேனா, ‘நான் எடுத்த நடவடிக்கையிலிருந்து பின் வாங்கப் போவதில்லை. எங்களுக்கு 113 எம்.பி-க்களின் ஆதரவு இருக்கிறது. அதனால் ராஜபக்சே பிரதமராக பெரும்பான்மையை நிரூபிப்பதில் பிரச்னை இருக்காது. நான் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் அரசியல் சட்ட சாசனத்துக்கு உட்பட்டதே' என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 பேர் உறுப்பினர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.