டெல்லியில் நடத்தப்பட்டு வரும் காற்று மாசுபாடு எதிர்ப்பு போராட்டத்திற்கு ஹாலிவுட் நடிகரும், ஆஸ்கர் விருது பெற்றவருமான லியோனர்டோ டிகேப்ரியோ ஆதரவு தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்று மாசு அதிகரித்திருக்கிறது. பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரையில் நச்சுக் காற்றை சுவாசித்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய மாநில அரசுகள் திணறி வருகின்றன. இந்த நிலையில், காற்று மாசை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர வலியுறுத்தி டெல்லியில் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்துகின்றனர். இதற்கு ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகேப்ரியோ ஆதரவு தெரிவித்துள்ளார்.
.
இதுதொடர்பாக இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப்பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது-
டெல்லி இந்தியா கேட் பகுதியில் 1500-க்கும் அதிகமானோர் காற்று மாசை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி இந்தியாவில் மட்டும் காற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 15 லட்சம்பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .
.
போராட்டத்தில் அனைத்து வயதினரும் பங்கேற்றுள்ளனர். இந்த போராட்டம் வெற்றி பெற வேண்டும். காற்றுமாசு விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் உடனடியாக தலையிட்டு சிறப்பு குழுவை அமைக்க வேண்டும். 2 வாரத்திற்குள்ளாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
இவ்வாறு டிகேப்ரியோ தனது இன்ஸ்டா பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தகவலுடன் ஒரு புகைப்படத்தையும் டிகேப்ரியோ பதிவிட்டுள்ளார். அதில் தந்தையின் தோழில் சிறுமி ஒருவர் உட்கார்ந்து கொண்டு கையில் பதாகை ஒன்றை வைத்துள்ளார். அதில், 'எனக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும்' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.