This Article is From Nov 20, 2019

7 வயது சிறுவனை அடித்துக்கொன்ற சிறுத்தை! ஆட்டை இரையாக வைத்து பிடிக்கப்பட்டது!!

சிறுத்தையை பிடிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, கடந்த 14-ம்தேதி கூண்டு அமைக்கப்பட்டு, அதற்குள் இளம் ஆட்டுக்குட்டி பொறியாக வைக்கப்பட்டது.

7 வயது சிறுவனை அடித்துக்கொன்ற சிறுத்தை! ஆட்டை இரையாக வைத்து பிடிக்கப்பட்டது!!

கூண்டுக்குள் அகப்பட்ட சிறுத்தைப்புலி

Lakhimpur:

7 வயது சிறுவனை அடித்துக் கொன்ற சிறுத்தைப்புலி ஒன்றை, வனத்துறை அதிகாரிகள் ஆட்டை பொறியாக வைத்து பிடித்தனர். 

உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூர் மாவட்டத்தில் பெலகாடி என்ற கிராமம் உள்ளது. வனப்பகுதியை ஒட்டி இந்த கிராமம் அமைந்திருப்பதால் வன விலங்குகள் அவ்வப்போது வந்து அட்டகாசம் செய்யும். 

இந்த நிலையில் கடந்த 11-ம்தேதி வயல்வெளிக்கு வந்த சிறுத்தைப்புலி ஒன்று, அங்கு விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவன் மனோஜ் குமாரை அடித்துக் கொன்று, தனது பசிக்கு இரையாக்கியது. இதனால் கிராம மக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகினர். 

சிறுத்தையை பிடிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, கடந்த 14-ம்தேதி கூண்டு அமைக்கப்பட்டு, அதற்குள் இளம் ஆட்டுக்குட்டி பொறியாக வைக்கப்பட்டது. தனக்கு வலை விரிக்கப்பட்ட சிறுத்தைக்கு தெரிந்திருக்குமோ என்னவோ, பொறி வைக்கப்பட்டதிலிருந்து அந்தப்பக்கமே சிறுத்தை தலை வைத்துப் பார்க்கவில்லை. 

இந்த நிலையில், நேற்று மாலை சிறுத்தைப் புலி கூண்டுக்குள் சிக்கியது. இதையடுத்து அதற்கு மயக்க ஊசி செலுத்திய மருத்துவர்கள், புலியின் உடல் நிலையை பரிசோதனை செய்தனர். 

இதில் அது 3 வயது சிறுத்தைப் புலி என்பதும், நல்ல ஆரோக்கியத்துடன் அது இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விட்டனர். 
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.