குஜராத் மாநிலத்தில் சிறுத்தைப்புலி ஒன்று 50 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்தது. அதனை ஏணி, கயிறு மற்றும் பொதுமக்களின் உதவியோடு வனத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
குஜராத் மாநிலம் சோட்டா உதேப்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், சிறுத்தை ஒன்று 50 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவர்களுடன் பொதுமக்களும் சேர்ந்து சிறுத்தையை மீட்க உதவி செய்தனர்.
முதலில் மீட்பு பணிக்கு சிறுத்தை ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதனால் வனத்துறையினர் சோர்வுக்கு ஆளாகினர்.
பின்னர், ஏணி ஒன்று கிணற்றுக்குள் இறக்கப்பட்டது. அத்துடன் கயிறும் போடப்பட்டது. இவற்றைப் பயன்படுத்தி சிறுத்தைப்புலி கிணறை விட்டு வெளியே வந்தது. பின்னர், காட்டை நோக்கி சிறுத்தைப்புலி ஓட்டம் பிடித்தது.
3 மணி நேர போராட்டத்தின் முடிவில் சிறுத்தை கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது. இந்த சம்பவம் சோட்டா உதேப்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.