This Article is From Mar 08, 2019

அன்று அன்புமணி.. இன்று பிரேமலதா..! - செய்தியாளர்கள் சந்திப்பில் சர்ச்சை!

செய்தியாளர் சந்திப்பில் அன்று அன்புணி நடந்து கொண்டதை போலவே இன்று பிரமலதாவும் நடந்துகொண்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

அன்று அன்புமணி.. இன்று பிரேமலதா..! - செய்தியாளர்கள் சந்திப்பில் சர்ச்சை!

மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சு வார்த்தை சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. திமுக-வின் கூட்டணி அறிவிப்பு இறுதியான நிலையில் தேமுதிக-வின் கூட்டணி யாருடன்? என்பது பெரும் இழுபறியாக நீடித்து வருகிறது. இதனிடையே மத்திய அமைச்சர் பியூஷ்கோயலுடன் சுதீஷ் பேச்சுவார்த்தை நடத்திய அதேநேரத்தில் தேமுதிக நிர்வாகிகள் துரைமுருகனை சந்தித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலமான திமுகவுக்கும் - தேமுதிகவுக்குமான வார்த்தைபோர் நீண்டுகொண்டே செல்கிறது.

இந்நிலையில், இதுகுறித்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொருளாளர் பிரமலதா கூறியதாவது, கூட்டணி தொடர்பாக வெகுவிரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும். திமுக மற்றும் அதிமுக இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தியது என யார் உங்களுக்கு சொன்னது?.

கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை, எந்த குழப்பமும் இல்லை. மரியாதை நிமித்தமாக வீட்டிற்கு சென்றால் உபசரிப்பது தான் தமிழர் பண்பாடு. பெரிய மனிதர் என்று நம்பிதான் தேமுதிகவினர் துரைமுருகன் இல்லம் சென்றனர். திமுக என்றாலே 'தில்லு முல்லு கட்சி தான்'. இதனை எப்போதும் உறக்க கூறுகிறேன். இது தான் உங்கள் அரசியல் சூழ்ச்சியா? வீட்டிற்கு வரவழைத்துத்தான் திமுகவினர் அரசியல் சூழ்ச்சியை கையாள வேண்டுமா?

கலைஞர் உடல்நலமில்லாமல் இருந்தபோது அவரை விஜயகாந்த் பார்க்க மு.க.ஸ்டாலின் கடைசி வரை அனுமதிக்கவில்லை. தேமுதிகவை பழிவாங்கும் நோக்கத்துடனே திமுக நடந்து கொள்கிறது. பியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது, துரைமுருகனுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தேமுதிக நிர்வாகிகள் தனிப்பட்ட முறையிலே சந்தித்துள்ளனர். அவர்கள் கூட்டணியை இறுதி செய்து மாநாடு அளவிற்கு சென்ற பின்னர் அவர்களிடம் எப்படி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று அவர் கூறினார்.

பாமகவை முதலில் அழைத்து கூட்டணி உடன்பாட்டில் கையெழுத்திட்டதால்தான் எல்லா குழப்பமும் ஏற்பட்டது. மணப்பெண் இருந்தால் பத்துபேர் பெண் கேட்டு வரத்தான் செய்வார்கள். அதுபோல் தான் தேர்தலிலும். யாரையும் மிரட்டி தேமுதிகவை பணிய வைக்க முடியாது. தேமுதிகவின் கொள்கையில் உறுதியாக உள்ளது என்று அவர் கூறினார்.

இதனிடையே, செய்தியாளர்களுடன் பேசும்போது நீ, நா, போ, என்று செய்தியாளர்களை பிரமலதா ஒருமையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு செய்தியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனால், செய்தியாளர்களின் சந்திப்பின் போதே இருதரப்புக்கும் கடும் வாக்குவாதம் எழுந்தது.
 

.