This Article is From Nov 21, 2019

ரஜினியும் கமலும் இணைவது எலியும் பூனையும் போன்றது; அதிமுக கடும் விமர்சனம்!

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற தனது அரசியல் கட்சியை நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தொடங்கினார். நடிகர் ரஜினிகாந்தோ, கடந்த டிசம்பர் 2017ல் நிச்சியமாக அரசியலுக்கு வருவேன் என்றும் 2021 தேர்தலுக்கு முன்பு கட்சியை தொடங்குவேன் என்று அறிவித்துள்ளார்.

ரஜினியும் கமலும் இணைவது எலியும் பூனையும் போன்றது; அதிமுக கடும் விமர்சனம்!

மக்கள் நலனுக்காக, இணைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், நிச்சயமாக இணைவோம்: ரஜினி கமல் அறிவிப்பு

Chennai:

உளறல் நாயகனோடு கரம் கோர்ப்பது எலியும், பூனையும் இணைந்து குடித்தனம் நடத்தப் போகிறோம் என்பதற்கு சமம் என ரஜினி கமல் குறித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா கடுமையாக விமர்சித்துள்ளது.

முன்னதாக, ஒடிசா பல்கலைக்கழகத்தில், டாக்டர் பட்டம் பெற்று திரும்பிய நடிகர் கமல்ஹாசன், சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, நானும், ரஜினியும் இணைவதில், அதிசயம் எதுவும் இல்லை. 44 ஆண்டுகளாக இணைந்து தான் உள்ளோம். 

அரசியலில் இணையும் அவசியம் வந்தால், கண்டிப்பாக சொல்கிறோம். தற்போது வேலை தான் முக்கியம். இதை பேச வேண்டியதில்லை. தமிழகத்தின் மேம்பாட்டிற்காக, இருவரும் சேர்ந்து பயணிக்க வேண்டியது வந்தால் பயணிப்போம் என்று அவர் கூறினார். 

இதையடுத்த ஒரு 1 மணி நேரத்தில் கோவா செல்வதற்காக, சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்திடம், கமல்ஹாசன் கருத்து குறித்து கேள்வி எழுப்பிய போது, "மக்கள் நலனுக்காக, நானும், கமலும் இணைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், நிச்சயமாக இணைவோம்,'' என்றார்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால், நிச்சயம் பாஜகவுடன் கூட்டணி அமைப்பார் என்று கருத்து பரவலாக பேசப்பட்ட நிலையில், மக்கள் நலனுக்கான கமலுடன் கூட்டணி வைப்பேன் என ரஜினி கூறியது தமிழகத்தில் பரபரப்பாக பேச்சப்பட்டு வந்தது. 

இதனிடையே, நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை சிறப்பிக்கும் வகையில், கமல்-60 என்ற நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், முதல்வர் ஆவேன் என எடப்பாடி பழனிசாமி, 2 ஆண்டுகளுக்கு முன் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். 

தமிழக அரசு நான்கைந்து மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்று 99 சதவீதம் பேர் சொன்னார்கள். ஆனால் அதிசயம் நடந்து தடைகளை தாண்டி ஆட்சி நீடித்து வருகிறது. அதுமாதிரியான அதிசயம், நேற்று நடந்தது; இன்று நடக்கிறது; நாளையும் நடக்கும் என்றார். 

நடிகர் ரஜினிகாந்தின் இந்த பேச்சு அதிமுகவினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அதிமுக அமைச்சர்கள் பலர் ரஜினிகாந்தின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.  

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற தனது அரசியல் கட்சியை நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தொடங்கினார். நடிகர் ரஜினிகாந்தோ, கடந்த டிசம்பர் 2017ல் நிச்சியமாக அரசியலுக்கு வருவேன் என்றும் 2021 தேர்தலுக்கு முன்பு கட்சியை தொடங்குவேன் என்று அறிவித்துள்ளார். 

இந்நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் வெளிவந்துள்ள கட்டுரையில், சினிமாவில் ரஜினியோடு போட்டி போட்டு தோற்றுவிட்ட கமல், அவரை அரசியலில் தன்னோடு இணைத்து ரஜினியின் தனிச்செல்வாக்கை மறைத்துவிட நரிக்கணக்கு போடுவதாகவும், இதற்கு ரஜினியும் வலியச் சென்று பலிகடா ஆவேன் என்பது பரிதாபம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆன்மிக அரசியலை தொடங்கி 234 தொகுதிகளிலும் தனியாக போட்டியிடப் போகிறேன் என்று அறிவிப்பு செய்த ரஜினி பகுத்தறிவு, கம்யூனிசம் என்று பல வேசம் போட்டு ஆன்மிகத்திற்கு எதிரான நிலைப்பாடு கொண்டு அலையும் உளறல் நாயகனோடு கரம் கோர்ப்பது எலியும், பூனையும் இணைந்து குடித்தனம் நடத்தப் போகிறோம் என்பதற்கு சமம் என்று தெரிவித்துள்ளது. 
 

.