This Article is From May 15, 2020

உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்! தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பு?

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்.

உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்! தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பு?

உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்! தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பு?

மதுபானக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 24-ம்தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அனைத்து மதுபானக்கடைகளும் மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில் தமிழக அரசு மே.7ம் தேதி முதல் மீண்டும் மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு வழக்குத் தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் டாஸ்மாக் கடையை திறக்க தடை விதிக்க முடியாது என்று தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 7ம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் தமிழகத்தில் சென்னையை தவிர்த்து மற்ற அனைத்து இடங்களிலும் திறக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுக்களை வாங்கிசென்றனர். 

மக்களின் அத்தியாவசிய தேவைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள சூழலில், அத்தனையையும் தகர்த்து ஆயிரக்கணக்கானோர் முண்டியடித்து மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தில் பொது முடக்கம் முடியும் மே 17-ம்தேதி வரையில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்து, ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்வதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு, இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆன்லைனில் மது விற்க முடியாது. அவ்வாறு செய்தால் சட்டம் ஒழுங்கு, மது கடத்தல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படும். அதனால் ஆன்லைன் விற்பனை சாத்தியம் கிடையாது என தமிழக அரசு வாதிட்டுள்ளது. 

மேலும், தனிமனித இடைவெளியை காவல் அதிகாரிகள்  துரிதமாக கண்காணித்தார்கள் என்றும் மத்திய அரசின் வழிகாட்டுதலின் படிதான் மாநிலத்தில் மதுக்கடை திறக்கப்பட்டது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, உச்சநீதிமன்றம் நீதிபதிகள், மதுபானக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

.