கொரோனா பரவலைத் தடுப்பதற்கான நான்காவது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும், அது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதற்கான விதிமுறைகள் குறித்து மே.18ம் தேதி அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்றிரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது, கொரோனா வைரஸ் மிக நீண்ட நாள்களுக்கு நம்முடன் இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், நம்முடைய வாழ்க்கையை கொரோனாவால் கட்டுப்படுத்தி வைத்திருக்க முடியாது. அதனால், நாம் கொரோனாவுடன் வாழப் பழகுவோம். நாம் முகக் கவசத்தை அணியவேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். ஆனால், நாம் கொரோனா வைரஸ் நம்மைத் தாக்க அனுமதிக்கக் கூடாது.
லாக்டவுன் 4 என்பது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். மாநில அரசுகளின் ஆலோசனைகளின் அடிப்படையில் இருக்கும். இந்த லாக்டவுன் குறித்த புதிய விதிமுறைகள் மே.18ம் தேதி அறிவிக்கப்படும். நாம் அந்த விதிமுறைகளை பின்பற்றி, முன்னேறி செல்வோம் கொரோனாவை எதிர்த்து போராடுவோம் என்று கூறினார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி கடந்த மார்ச்.25ம் தேதி ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தினார். எனினும், இந்த நாட்களில் கொரோனா பரவல் குறையவில்லை. தொடர்ந்து, பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதைத்தொடர்ந்து, கடந்த வாரம் முதல் பல்வேறு கட்டுப்பாடுகளையும் தளர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்த ஊரடங்கு உத்தரவானது, தினசரி கூலியை நம்பியிருக்கும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டதாக அரசியல் கட்சிகள், வணிகர்கள், குடிமக்கள் என பல்வேறு தரப்பில் இருந்தும் ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வரும்படி பிரதமர் மோடிக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டது.
இதனிடையே, நேற்று முன்தினம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, ஊரடங்கை "படிப்படியாக திரும்பப் பெறுவது" குறித்து அரசு முடிவெடுக்கும், என்று கூறியிருந்தார்.
நம் முன்னால் இரண்டு பெரும் சவால்கள் உள்ளன. ஒன்று தொற்றுநோயின் பரவல் விகிதத்தை குறைப்பது, மற்றொன்ரு பொது நடவடிக்கைகளை படிப்படியாக அதிகரிப்பது.
ஊரடங்கை படிப்படியாக திரும்ப பெறுவதை பொறுத்தவரை, வைரஸூக்கான தடுப்பூசி அல்லது தீர்வைக் காணாத வரை வரை, வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான மிகப்பெரிய ஆயுதம் சமூக விலகல் என்பதை நாம் தொடர்ந்து நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
நேற்றைய தினம் முதல், இந்திய ரயில்வே ஒரு நாளைக்கு 15 ரயில்களுடன் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் பிற முக்கிய நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் விமான போக்குவரத்து, ரயில் மற்றும் சாலை போக்குவரத்துகளும் முற்றிலும் முடக்கப்பட்டன. எனினும், வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தினமும் உயர்ந்தபடி உள்ளது. இதுபோன்ற கடுமையான கட்டுபாடுகளும் இல்லாமல் இருந்திருந்தால், நோய் பரவல் இன்னும் மோசமாக இருந்திருக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 2,293 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 70,000ஐ கடந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மும்பை, டெல்லி, அகமதாபாத் மற்றும் புனே உள்ளிட்ட நகரங்களில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.